முதலில் தப்பியோடியதே ரயில்வே போலீஸ் தான்!
ஆயுதம் இல்லாத ஒரு போலீஸ்காரர் தான் ஓடிச் சென்று இன்னொரு போலீஸ்காரரிடமிருந்து துப்பாக்கியை பறித்துக் கொண்டு வந்து தீவிரவாதியை நோக்கி சுட்டுள்ளார். ஆனால், அந்த குண்டும் அவன் மீது பாயவில்லை.
சத்ரபதி ரயில் நிலையத்தில் தான் அஜ்மல் அமீர் கஸாபும் அவனது கூட்டாளி இஸ்மாயில் கானும் முதலி்ல் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 56 பேர் பலியாகினர்.
இந்தக் காட்சிகள் அங்கு வைக்கப்பட்டுள்ள குளோஸ் சர்க்யூட் கேமராக்களில் பதிவாகியுள்ளன. இந்த கேமராவில் பதிவான வீடியோவை உளவுப் பிரிவினர் போட்டுப் பார்த்தபோது ரயில்வே போலீசாரின் நடவடிக்கைகளைப் பார்த்து வெறுத்துப் போய்விட்டனர்.
இதை சில டிவிக்களுக்கும் லீக் செய்துள்ளனர். அந்த வீடியோவில் உள்ள விவரம்:
மணி: இரவு 9.55
9 ரயில்வே போலீசார் வாயில் அருகே கைகளில் துப்பாக்கிகளுடன் நின்று பேசிக் கொண்டுள்ளனர். மக்கள் இரு பக்கமும் போய் வந்து கொண்டுள்ளனர்.
அப்போது இரு தீவிரவாதிகள் உள்ளே நுழைகின்றனர். முதல் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டவுடனேயே மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடுகின்றனர். இதில் முதலில் ஓடுவது ரயில்வே போலீசார் தான். ஒரு போலீஸ்காரரால் ஓட முடியவில்லை. அவரை சக்கர நாற்காலியில் வைத்துக் கொண்டு தள்ளிச் செல்கின்றனர்.
கைகளில் துப்பாகிகளுடன் சில போலீசார் ஓடிச் சென்று இடதுபுறமுள்ள தூண்களுக்குப் பின்னால் மறைகின்றனர். அவர்கள் சுடத்தான் மறைகின்றனர் என்று நினைத்தால் தவறு. அவர்கள் வெளியே எட்டி தீவிரவாதி போய்விட்டானா என்று தான் பார்க்கிறார்களே தவிர தீவிரவாதியை நோக்கி துப்பாக்கியை நீட்டக் கூட இல்லை.
இதை வலது புறத்தில் தூணுக்குப் பின்னால் மறைந்திருக்கும் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த போலீஸ்காரரான ஜூலு யாதவ் பார்த்துக் கொண்டே இருக்கிறார். துப்பாக்கிகளை வைத்தபடி எதி்ர்புறம் உள்ள போலீசாரை நோக்கி கையை ஆட்டுகிறார். ஆனால், யாரும் எதுவும் செய்யவில்லை.
இத்தனைக்கும் அங்கு மக்கள் யாருமே இல்லை. இவர்கள் சுட்டால் தீவிரவாதி தான் சாவான், மக்கள் யாருக்கும் காயம் ஏற்படக் கூட வாய்ப்பில்லை.
இதையடுத்து ஜூலு யாதவ் பாதையைத் தாண்டி இடப்புற தூணுக்கு வருகிறார். ஒரு போலீஸ்காரரிடம் இருந்து துப்பாக்கியை பறித்துக் கொண்டு தயார் நிலைக்கு வருகிறார். அதற்குள் தீவிரவாதி தூணுக்கு பின்னால் போய்விட அவனது கவனத்தை ஈர்க்க, ஒரு நாற்காலியைத் தூக்கி வீசுகிறார். இதைப் பார்த்த தீவிரவாதி தூணின் மறைவிலிருந்து வெளியே வரவே அவனை நோக்கி சுடுகிறார். ஆனால், அந்த குண்டு அவன் மீது படவில்லை.
இதையடுத்து அவன் மெதுவாக அடுத்த பிளாட்பாரத்தை நோக்கி சென்றுவிடுகிறான்.
போலீசார் தங்கள் பைகள், துப்பாக்கிகளோடு அந்த வீடியோ கேமராவின் பிரேமுக்கு வெளியே போய்விடுகின்றனர்.
இது தான் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து ஜூலு யாதவ் கூறுகையில், கையில் துப்பாக்கியை வைத்திருந்த போலீசார் ஓடியது கேவலமானது. அவனை பின் பக்கமாக சுட்டிருக்கலாம். நான் இந்தப் பக்கமாக நின்று சுடு்ங்கள் சுடுங்கள் என்று கத்தியும் அவர்கள் கேட்கவில்லை.
ஒரு கட்டத்தில் ஒரு தீவிரவாதியின் குண்டுகள் தீர்ந்துவிட்டன. இதையடுத்து அவன் கீழே அமர்ந்து இன்னொரு மேகசீனை நிரப்ப ஆரம்பித்தான்.
இந்த நிலையில் தான் நான் எதிர்ப் பக்கமாக ஓடி இன்னொரு போலீஸ்காரரிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்து அந்தத் தீவிரவாதியை நோக்கி சுட்டேன். ஆனால் குறி தப்பிவிட்டது. அவன் என் பக்கமாக வருவான் என்று நினைத்தேன், ஆனால் அவனது கூட்டாளி அடுத்த பிளாட்பார்ம் பக்கமாகப் போய்விட்டதால் அவனும் போய்விட்டான் என்றார்.
இந்த ரயில் நிலையத்தில் மட்டும் 100 ரவுண்டுகள் சுட்டுள்ளனர் போலீசார். பலி எண்ணிக்கை 56. இதில் ஷிண்டே என்ற ரயில்வே காவலரும் அடக்கம்.
இத்தனைக்கும் அந்த ரயில் நிலையத்தில் அந்த நேரத்தி்ல் 200 ரயில்வே போலீசார், 80 ரயில்வே பாதுகாப்புப் படையினர், 70 ஹோம் கார்டுகள் பணியில் இருந்துள்ளனர்.