பதவி விலக நெருக்கடி-மன்னிப்பு கேட்ட அச்சுதானந்தன்
என்எஸ்ஜி கமாண்டோ சந்தீப்பின் வீட்டுக்கு முதலில் செல்லாத முதல்வர், பத்திரிக்கைகள் சுட்டிக் காட்டிய பின்னரே வந்தார். இதனால் அவரை வரவே தேவையில்லை என சந்தீப்பின் தந்தை உன்னிகிருஷ்ணன் கூறியிருந்தார்.
ஆனால், அவரது நியாயமான கோபத்தை புறம் தள்ளிவிட்டு வீட்டுக்குள் நுழைந்த அச்சுதானந்தனை விரட்டியத்தார் உன்னிகிருஷ்ணன். அப்போது உன்னிகிருஷ்ணனைத் தடுத்த அச்சுதானந்தனின் பிஏ மற்றும் கேரள உளவுப் பிரிவு போலீசாரை நாய்களே, வெளியே போங்கள் என்று விரட்டினார்.
இதையடுத்து பேட்டி தந்த அச்சுதானந்தன், உன்னிகிருஷ்ணனுக்கு மன நிலை பாதிக்கப்பட்டுவிட்டது என்று கூறி அதிர்ச்சியைத் தந்தார். அத்தோடு நிற்காமல், சந்தீப் வீடு என்பதால் தான் போனேன், இல்லாவிட்டால் நாய் கூட அந்த வீட்டுக்குப் போகாது என்றார்.
இதற்கு நாடு முழுவதுமே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கோரியுள்ளார்.
மேலும் இந்த விவகாரம் கேரளத்திலும் பெரிய அளவில் வெடித்துள்ளது. சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகள் நேற்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டன. பாஜகவினர் ஒரு நாயின் கழுத்தில் அச்சுதானந்தனின் படத்தை தொங்கவிட்டு ஊர்வலம் நடத்தினர்.
ஆனால், தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க அச்சுதானந்தன் மறுத்துவிட்டார். இதையடுத்து டேமேஜ் கண்ட்ரோலில் இறங்கியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
அச்சுதானந்தனின் பேச்சுக்கு கட்சியின் சார்பில் மன்னிப்பு கேட்டார் சிபிஎம் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத். இதற்கிடையே அச்சுதானந்தனுக்கு எதிராக சிபிஎம்மில் உள்ள அவரது எதிர் கோஷ்டியான பிணராய் விஜயன் கோஷ்டி அவரை நீக்க வேண்டும் என கட்சியிடம் கோரிக்கை வைத்துள்ளது.
நிலைமை மோசமாவதை உணர்ந்த அச்சுதானந்தன் இன்று காலை கொஞ்சம் இறங்கி வந்தார். நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. நான் மனம் நொந்து போயிருக்கிறேன். தவறாகப் பேசியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.
ஆனால், பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அச்சுதானந்தனின் அடித்துள்ள இந்த பல்டி உதவுமா என்று தெரியவில்லை.