தீவிர கண்காணிப்பில் சென்னை விமான நிலையம்-பாலத்தில் நிற்க தடை!
சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) தவிர இந்தோ-திபெத்தியன் எல்லை பாதுகாப்புப் படை போலீசாரும் (ITBP) 24 மணி நேர பாதுகாப்புப் பணியி்ல் ஈடுபட்டுள்ளனர்.
இப்போது வந்துள்ள அச்சுறுத்தலையடுத்து தமிழக போலீசின் அதிவிரைவு அதிரடிப் படையினரும் சென்னை விமான நிலைய பாதுகாப்புப் பணியில் ஈடுபடு்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படைக்கு துணை கமிஷ்னர் தலைமையில் 2 உதவி கமிஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள், 20 சப்-இன்ஸ்பெக்டர்கள், 100 போலீசார் அடங்கிய குழு கூடுதலாக விமான நிலைய பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த போலீசார், பாதுகாப்புப் படையினர் அனைவருமே ஏ.கே.-47 ரக துப்பாக்கிகள், புல்லட் புரூப்களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விமான நிலையத்தின் வெளியே மட்டுமல்லாமல் உள்ளேயும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. விமான நிலைய போர்டிகோவில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் அனைத்து நுழைவு வாயில்களிலும் கூடுதலாக மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் சிசிடிவி கேமராக்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சாதாரண உடையிலும் விமான நிலையத்தின் அனைத்துப் பகுதிகளிலும் போலீசார் வலம் வந்து கொண்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தின் எதிரே புதிய மேம்பாலம் கட்டப்பட்டு சமீபத்தில் போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டது. இந்த மேம்பாலத்தில் இருந்து விமானங்கள் இறங்குவது, பறப்பது போன்றவற்றை மிக அருகில் எளிதாக பார்க்கலாம்.
இதனால் மேம்பாலத்தில் செல்வோர் வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பார்த்துச் செல்கின்றனர்.
இதுவும் தற்போது விமான நிலைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதால் மேம்பாலத்தில் வாகனங்களை நிறுததவும், பாலத்தில் நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேம்பாலத்திலும் ஆயுதம் ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களும் சோதனைக்குள்ளாக்கப்படுகின்றன. விமான நிலைய ஸ்டாண்டில் உள்ள டாக்சி டிரைவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அடையாள அட்டை இல்லாதவர்கள் அங்கே நிற்கவே கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதே போல் கோவை, திருச்சி, மதுரை விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.