கேட்டது நிவாரணம்-கிடைத்தது துப்பாக்கிச் சூடு!
திருவாரூர்: நிவாரணம் கேட்டு மறியல் செய்த பொது மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை திருவாரூர் அருகே உள்ள முத்துப்பேட்டை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முகாமிற்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் வருகை தந்த போது அவரை முற்றுகையிட்ட மக்கள் தங்களுக்கு முறையான உணவு, குடி நீர் போன்றவை கூட தரப்படவில்லை என்று குற்றம் சாட்டினர்.
மேலும் மருதங்காவெளித் தெருவில் உள்ள வீடுகள் இடிந்துள்ளதாகவும், அங்கு வெள்ளம் வடியவில்லை என்றும் கூறினர்.
இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் மூலம் உரிய தீர்வு காணப்படும் என்று அமைச்சர் மதிவாணன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அமைச்சரின் பேச்சில் சமாதானம் அடையாத பொது மக்கள் முத்துப்பேட்டை பேரூராட்சி மீது அலுவலகம் மீது பொது மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், பேரூராட்சித் தலைவர் கார்த்திக் வீட்டையும் கற்கள் வீசி தாக்கியுள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களை கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே இருந்ததால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதனால் அங்கிருந்த பொது மக்கள் அலறி சிதறி ஓடினர். இந்த சம்பவம் காரணமாக முத்துப்பேட்டையில் பரபரப்பு நிலவுகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.