ஏற்றத்துடன் தொடங்கிய பங்கு வர்த்தகம்
மும்பை: மும்பைப் பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலையில் வர்த்தகம் தொடங்கியதும் 69 புள்ளிகள் உயர்ந்தன.
உலக பங்குச் சந்தையில், நிலையான தன்மை காணப்படுவதால் பங்குகளை விற்பவர்களின் எண்ணிக்கை குறைந்து, வாங்குவது அதிகரித்ததால் பங்கு வர்த்தகத்தில் ஏற்றம் காணப்பட்டது.
மேலும், வீட்டு வசதித்துறை, ஏற்றுமதி, ஆட்டோமொபைல் பிரிவுகளில் அரசு சனிக்கிழமை சில சலுகைகளை அளிக்கும் என எதிர்பார்ப்பு நிலவுவதாலும் பங்கு வர்த்தகம் முன்னேற்றத்துடன் காணப்படுகிறது.
மும்பை பங்குச் சந்தையில், இன்று காலை 69.50 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 8,816.93 ஆக இருந்தது.
அதேபோல தேசிய பங்குச் சந்தையான நிப்டியும், 19.45 புள்ளிகள் உயர்ந்து 2,674.90 புள்ளிகளாக இருந்தது.
இன்றைய வர்த்தகத்தில் மகிந்திரா அன்ட் மகிந்திராவுக்கு 1.32 சதவீத உயர்வும், டாடா மோட்டார்ஸுக்கு 1.13 சதவீத உயர்வும் காணப்பட்டது.
அதேபோல ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி வங்கி ஆகியவற்றின் பங்குகளின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.
ஆசிய வர்த்தக சந்தையில், ஹாங்காங்கின் ஹாங் செங்கில் 1.98 சதவீத உயர்வும், ஜப்பானின் நிக்கியில் 0.62 சதவீத உயர்வும் காணப்பட்டது.