மும்பை பற்றி எரிந்தபோது பார்ட்டிக்குப் போன ராகுல் காந்தி
நாடே அதிர்ந்து போயிருந்த நேரத்தில் ராகுல்காந்தி இப்படி பார்ட்டிக்குப் போனது சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு தொடங்கிய இந்த விருந்து அதிகாலை வரை நீடித்துள்ளது. இரவு முழுக்க பார்ட்டியில் கலந்து கொண்டார் ராகுல் காந்தி. ராஜீவ் காந்தியின் தோழரும், குடும்ப நண்பருமான கேப்டன் சதீஷ் சர்மாவின் மகன் சமீர் சர்மா.
சமீரும், ராகுலும் சிறு வயது முதலே தோழர்கள். சமீருக்குக் கல்யாணம் ஆகப் போகிறது. இதையொட்டி, அவர் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணிந் சகோதரி லீனா முசாபிர் கொடுத்த விருந்துதான் இது.
டெல்லி அருகே உள்ள ராதே மோகன் செளக் என்ற இடத்தில் உள்ள பிரமாண்டமான பண்ணை இல்லத்தில் இந்த பார்ட்டி நடந்தது. கிட்டத்தட்ட 800 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர். மிக மிக ஆடம்பரமாக பார்ட்டி நடந்துள்ளது.
மும்பையில் அப்பாவி மக்களைக் காப்பாற்ற தீவிரவாதிகளுடன் கமாண்டோக்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிக் கொண்டிருந்த நிலையில், ராகுல் காந்தி ஆடம்பர விருந்தில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ராகுல் காந்தி பார்ட்டிக்குப் போனது குறித்து அஜய் பால் என்பவர் இப்படிக் கூறுகிறார் - மும்பை முழுவதும் ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட்டுகளில் பார்ட்டிகள் உள்ளிட்டவற்றை ரத்து செய்து விட்டனர். மற்ற இடங்களில் ஆடம்பரமின்றி எளிமையான முறையில் நிகழ்ச்சிகள் மாற்றி அமைக்கப்பட்டன
ஆனால் ராகுல்காந்தி பார்ட்டியில் கலந்து கொண்டு சந்தோஷமாக இருந்துள்ளார். அவரது நடவடிக்கைகள் எதிர்காலத் தலைவர்கள் மீதான எங்களது நம்பிக்கையை தகர்க்கும் வகையில் அமைந்து விட்டது என்கிறார் பால். பால், ஓபராய் ஹோட்டலில் சிக்கி, ஹோட்டல் ஊழியர்களால் காப்பாற்றப்பட்டு உயிர் மீண்ட அப்பாவிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.