தனுஷ்கோடி: கரை ஒதுங்கியது புலிகள் படகு?
ராமநாதபுரம்: தனுஷ்கோடி அருகே குண்டுகள் துளைக்கப்பட்ட படகு ஒன்று கரை ஒதுங்கியது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடும் யுத்தம் நடைபெற்று வருகிறது.
இதனால், புலிகளின் முக்கியத் தலைநகரான கிளிநொச்சியை கைப்பற்ற ராணுவம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் குண்டுகள் துளைக்கப்பட்ட மூன்று படகுகள் தமிழக கடலோரம் கரை ஒதுங்கியுள்ளது.
கடந்த மாதம் 19-ம் தேதி ஒரு படகும், 21-ம் தேதி மற்றொரு படகும் தனுஷ்கோடி அருகே கரை ஒதுங்கியுள்ளது.
மூன்றாவதாக குண்டுகள் துளைத்த படகு சங்கம் பாயின்ட் என்ற இடத்தில் கரை ஒதுங்கி இருந்தது. இந்த படகில் பொருத்தி இருந்த என்ஜின் கழற்றப்பட்டிருந்தது.
இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டில் ஊடுருவி இருப்பார்களோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
கரை ஒதுங்கிய இந்த பைபர் படகு இதற்கு முன்பு கரை ஒதுங்கிய இரண்டு படகுகளை காட்டிலும் அளவில் பெரியதாக உள்ளது.
இந்தப் படகை கடலோர காவல் படை அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்பு, அது மண்டபத்தில் உள்ள கடலோர காவல் படை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு முக்கிய உயர் அதிகாரிகள் படகை பார்வையிட்டனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.