ஐபி சொன்னது.. கடற்படை கேட்டதா?

டெல்லி: கடல் வழியாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என தங்களுக்கு மத்திய உளவுப் பிரிவான ஐ.பியிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை என கடற்படை கூறியுள்ள நிலையில், அந்த எச்சரிக்கை குறித்த தனது சுற்றறிக்கையை ஐ.பி. லீக் செய்துள்ளது.
மும்பை தாக்குதலையடுத்து கடற்படை, ரா, ஐபி, மாநில அரசின் உளவுப் பிரிவு, கடலோரக் காவல் படை, போலீசார் ஆகிய அனைவர் மீதும் சரமாரியாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
இதையடுத்து இவர்களுக்குள்ளேயே மோதல் வெடித்துள்ளது. நாங்கள் எச்சரித்தும் கூட கடற்படை அதை அலட்சியப்படுத்திவிட்டது என ஐபி கூறுகிறது. இதை கடற்படை மறுத்தது. இந் நிலையில் 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி கடற்படை, மத்திய அரசு ஆகியோருக்கு தான் அனுப்பிய ரகசிய சுற்றறிக்கையை ஐ.பி. வெளியில் கசிய விட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தானில் 500 முதல் 600 தீவிரவாதிகளுக்கு கடல் வழியாகச் சென்று தாக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சியை ஐஎஸ்ஐ, ராணுவம் மற்றும் அந் நாட்டு கடற்படை ஆகியோரும் சில தீவிரவாத அமைப்புகளும் இணைந்து அளித்து வருகின்றன.
அவர்களுக்கு நீச்சலில் ஆரம்பித்து படகுகளை இயக்குவது, கடல் வழியே அன்னிய நாட்டில் நுழைவது, மீன் பிடிப் படகுகளை கடத்துவது, கடலோரங்களில் கண்ணி வெடிகளை வைப்பது, ஆர்டிஎஸ் குண்டுகளை இயக்குவது, துப்பாக்கிகளைக் கையாளுவது ஆகியவை குறித்த பயிற்சிகள் அளி்க்கப்பட்டு வருவதாக எங்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.
மீனவர்கள் என்ற போர்வையில் அன்னிய நாட்டுக்குள் நுழைவது எப்படி என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். இது இந்தியாவைக் குறி வைத்து நடத்தப்படும் பயிற்சியாகவே தெரிகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ரகசிய அறிக்கையைப் பார்த்தால், மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் என்னென்ன செய்தார்களே அவையெல்லாம் அப்படியே சொல்லப்பட்டு்ள்ளது உறுதியாகிறது.
இந்த எச்சரிக்கை அறிக்கையை கடற்படை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையா அல்லது சில மாதங்கள் தீவிரமாக கண்காணித்துவிட்டு அப்புறம் அப்படியே விட்டுவிட்டார்களா என்று தெரியவில்லை.
அதே போல மத்திய அரசுக்குத் தரப்பட்ட இந்த அறிக்கை உள்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கடலோரக் காவல் படைக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனால் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அதை அவர் செய்தாரா என்று தெரியவில்லை.
'மார்கோஸ்' படை லெட்டர் கேட்டதா?:
இதற்கிடையே கடற்படை மீது இன்னொரு குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. மும்பைக்குள் தீவிரவாதிகள் நுழைந்தவுடன் கடற்படையின் MARCOS கமாண்டோ படையின் உதவியை மாநில அரசு கோரியது.
ஆனால், அதற்கு மகாராஷ்டிர தலைமைச் செயலாளாளரிடமிருந்து உரிய முறையில் லெட்டர் வந்தால் தான் நாங்கள் களமிறங்க முடியும் என அதன் அதிகாரிகள் கூறி இழுத்தடித்ததாக மும்பை போலீசார் இப்போது குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை கடற்படை மறுத்துள்ளது. தலைமைச் செயலாளரிடமிருந்து போன் வந்தவுடனேயே படை அனுப்பப்பட்டுவிட்டது என்று கூறுகிறது கடற்படை.
குஜராத்துக்கும் கடல் வழியே ஆபத்து?:
இதற்கிடையே குஜராத்தைத் தாக்கவும் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அந்த மாநில உளவுப் பிரிவு கூறியுள்ளது. குறிப்பாக கட்ச், ஜாம் நகர் பகுதிகளுக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ள உளவுப் பிரிவினர் அங்கு கடல் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
தீவிரவாதிகளுக்கு பாக். ராணுவம் பயிற்சி:
இதற்கிடையே மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகளும், ஐ.எஸ்.ஐயைச் சேர்ந்த சிலரும்தான் பயிற்சி அளித்து அனுப்பி வைத்ததாக முன்னாள் பென்டகன் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும் தீவிரவாதிகளுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக இதுவரை தெரியவில்லை என்று அந்த செய்தி கூறுகிறது.
இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி:
பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் அதிகாரிகள் சிலரும், ராணுவத்தின் கீழ் உள்ள ஐஎஸ்ஐ அமைப்பைச் சேர்ந்த சிலரும்தான் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்துள்ளனர் என அமெரிக்க உளவுத்துறை உறுதியாக நம்புகிறது.
இவர்கள்தான் மும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்துள்ளனர் என்று அது கூறுகிறது.












Click it and Unblock the Notifications