இலங்கை பிரச்சனை: சொதப்பும் அதிகாரிகள்-ராமதாஸ்
டெல்லி: இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்தியா நேரடியாக தலையிடுவதில் சிரமம் இருந்தால் இதை ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்துக்கு கொண்டு போக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் இந்த பிரச்சனையில் தற்போதுள்ள அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலால் நிறைய குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே இந்தப் பிரச்சனையின் ஆழம் தெரிந்த தமிழர்கள் இடம்பெறும் ஒரு ஆலோசனைக் குழுவை பிரதமர் அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இலங்கையில் போர் நிறுத்தம் கோரி முதல்வர் கருணாநிதி தலைமையில் டெல்லி சென்ற குழுவில் இடம் பெற்ற ராமதாஸ், முகர்ஜியை சந்தித்தபோது ஒரு கடிதம் தந்தார். அதில்,
இலங்கையில் ஏராளமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்தக் கொடூரமான மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை தடுக்க இந்தியா உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும். இப் பிரச்சனை குறித்து, தமிழகத்தில் இரண்டு முறை நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிகள் கூட்டத்திலும், சட்டசபையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இருப்பினும், இதுவரை இதில் தலையிட இந்தியா முன்வரவில்லை.
இந்த விஷயத்தில் இந்தியா நேரடியாக தலையிட முகாந்திரங்கள் உள்ளன. இலங்கை பிரச்சனையினால் தமிழகத்துக்கு தஞ்சம் கேட்டு வரும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. மேலும் இலங்கைக்கு சீனாவும் பாகிஸ்தானும் அளித்துவரும் ஆயுத உதவிகள் காரணமாக இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது. குறிப்பாக கடலோரப் பகுதிகளுக்கு பெரும் ஆபத்து காணப்படுகிறது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் தொடர்கிறது. இந்த காரணங்களால் இந்தியா நேரடியாகவே தலையிட முடியும்.
அவ்வாறு தலையிடுவதில் தயக்கம் இருந்தால் இந்தப் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்துக்கு கொண்டு செல்லலாம். தற்போதுள்ள அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலின்படி நிறைய குழப்பம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, இலங்கை பிரச்சனையின் ஆழம் தெரிந்த தமிழர்கள் அதில் இடம்பெறும் ஒரு ஆலோசனைக் குழுவை பிரதமர் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ராமதாஸ் மறைமுகமாகக் குறிப்பிடும் அந்த அதிகாரிகளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனனும் அடக்கம் என்கிறார்கள் பாமக வட்டாரத்தில்.