இந்தியா - ரஷ்யா அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது
சமீபத்தில் அமெரிக்காவுடன் இந்தியா, சிவில் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதேபோன்ற ஒப்பந்தத்தில் பிரான்சுடனும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
இந்த நிலையி்ல ரஷ்யாவுடனும் இதேபோன்ற ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் மெத்வதேவ் 3 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். இன்று பிரதமர் மன்மோகன் சிங்குடன் மெத்வதேவ் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவில் கூடுதலாக நான்கு அணு உலைகளை ரஷ்யா இந்தியாவுக்குக் கட்டித் தரும். இவை கூடங்குளத்தில் அமையும்.
ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கும், மெத்வதேவும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது மன்மோகன் சிங் கூறுகையில், ரஷ்யாவுடன் ஏற்பட்டுள்ள அணு சக்தி ஒப்பந்தம் புதிய மைல் கல்லாகும் என்றார்.
இந்த ஒப்பந்தம் தவிர விண்வெளி, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இன்று இந்தியாவும், ரஷ்யாவும் பத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
அதிபரான பின்னர் முதல் முறையாக மெத்வதேவ் இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை மத்திய வெளியுறவு இணை அமைச்சர் அனந்த் சர்மா இந்திரா காந்தி விமான நிலையத்தில் வரவேற்றார்.
இதுவரை விற்பனையாளர் - வாங்குவோர் என்ற அளவிலேயே இருந்து வரும் இந்திய, ரஷ்ய உறவை, தீவிரவாதத்திற்கான போரிலும், அணு சக்தி ஒத்துழைப்பிலும் இணைந்து செயல்படும் பார்ட்னராக மாற்ற மெத்வதேவ் தனது பயணத்தை பயன்படுத்திக் கொள்ளவிருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
முன்னதாக தனது பயணம் குறித்து மெத்வதேவ் கூறுகையில்,பாதுகாப்பு, ஆயுத விற்பனை உள்ளிட்டவற்றில் மட்டுமே இந்திய, ரஷ்ய உறவு நெருக்கமாக உள்ளது. இதை மேலும் ஆழமாக்க ரஷ்யா விரும்புகிறது என்றார் அவர்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவுக்கு வந்துள்ள முதல் வெளிநாட்டு அதிபர் மெத்வதேவ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.