புதிய பங்கு வெளியீடு: கால அவகாசத்தை நீட்டித்தது செபி
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகத்தில் நிலவும் சுணக்கத்தை அடுத்து, புதிய பங்குகள் வெளியுடுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது செபி எனப்படும் இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு மையம்.
இன்றைய நிதி நெருக்கடி சூழலில், பல நிறுவனங்களால் அவற்றின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை திரட்டிக் கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது.
பரஸ்பர நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பும் சரிவடைந்து வருகிறது. இவற்றைச் செபி ஒரு சில புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பொதுவாக ஒரு நிறுவனம் 'செபி' அமைப்பிடம் பங்கு வெளியீட்டிற்கு அனுமதி பெற்ற பிறகு மூன்று மாத காலத்திற்குள் பொது மக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் இறங்க வேண்டும் என்ற விதி உள்ளது. இப்போது இந்த விதியைத் தளர்த்தி, 1 ஆண்டு வரை கால அவகாசம் தந்துள்ளது செபி.
வியாழக்கிழமை நடந்த செபி இயக்குனர் குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
பங்கு வெளியீட்டிற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும், இந்த ஓராண்டு காலத்திற்குள் பங்கு வெளியீட்டை மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்கள், அண்மைக் கால புள்ளி விவரங்களையும், நிறுவனம் குறித்த இதர புதிய தகவல்களையும் செபி அமைப்பிற்கு தெரிவிக்க வேண்டும் என்ற புதிய நெறிமுறையையும் 'செபி' அமைப்பு கொண்டு வந்துள்ளது.
பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கும் ஒரு சில புதிய திட்டங்களை அறிவித்துள்ளது செபி. குறிப்பாக, கால வரையறையுடன் கூடிய பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் தொகையை பரஸ்பர நிதி நிறுவனங்களிடமிருந்து பெற முடியாத வகையில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பங்கு வர்த்தகம் நன்கு இல்லாத நிலையில், பல முதலீட்டாளர்கள், பரஸ்பர நிதி திட்டங்களில் செய்திருந்த முதலீட்டை அதிக அளவில் திரும்ப பெற துவங்கியுள்ளனர். இதனால் பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டே 'செபி' அமைப்பு இத்திட்டத்தை அறிவித்துள்ளது. இப்புதிய திட்டத்தின்படி, காலவரையறையுடன் கூடிய புதிய திட்டங்களை, பரஸ்பர நிதி நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் கட்டாயம் பட்டியலிட வேண்டும்.
அவ்வாறு பட்டியலிடப்படுவதால் முதலீட்டாளர்கள், அவர்கள் கொண்டுள்ள யூனிட்டுகளை பங்குச் சந்தையின் வாயிலாக விற்றுக்கொள்ளலாம். இதனால், முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதி நிறுவனங்களிடமிருந்து தொகையை பெறுவதற்கு பதிலாக, யூனிட்டுகளை பங்குச் சந்தையில் விற்பதன் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.
இந்த புதிய திட்டம், பரஸ்பர நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பில் ஏற்படும் திடீர் சரிவைத் தடுத்து நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.