'மும்பை': தீவிரவாதிகளுக்கு உதவிய காஷ்மீர் போலீஸ்காரர் கைது
கொல்கத்தா& அகமதாபாத்: மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் 6 பேரைப் பிடித்து மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதே போல கொல்கத்தாவில் ஜம்மூ காஷ்மீரைச் சேர்ந்த போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் கடத்திப் பயன்படுத்தி எம்.வி. குபேர் மீன் பிடி படகு குறித்து இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள்தான் குபேர் படகை மும்பைக்கு வழி நடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் கட்ச் மற்றும் ஜாம்நகர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். கடந்த காலத்தில் இவர்கள் வெடி பொருட்களைக் கடத்தியது தொடர்பாக சிக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு தாவூத் இப்ராகிம் கூட்டத்துடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கொல்கத்தாவில் போலீஸ்காரர் கைது:
இதற்கிடையே தீவிரவாதிகளுக்கு உதவியதாக ஜம்மூ காஷ்மீரைச் சேர்ந்த போலீஸ்காரர் முக்தார் அகமத் மற்றும் தெளபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இருவரும் தீவிரவாதிகளுக்கு 20க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கித் தந்தது தெரியவந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்தவரான முக்தாரின் மனைவி கொல்கத்தாவைச் சேர்ந்தவர் ஆவார்.
சில காலம் கொல்கத்தாவிலும் வசித்துள்ள முக்தாருக்கு வங்க தேச தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மூலமாக மும்பை தாக்குதலுக்கு வந்தவர்களுக்கு சிம் கார்டுகளை வாங்கி்த் தருவதில் இவரும் தெளபீக்கும் உதவியுள்ளனர்.