கொல்கத்தா வந்தார் புட்பால் மன்னன் மாரடோனா
கொல்கத்தாவுக்கு இன்று அதிகாலை 1.25 மணிக்கு வந்து சேர்ந்தார் மாரடோனா. அவரை விமான நிலையத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு வந்து வரவேற்றனர்.
மேலும் மாரடோனா அழைத்துச் செல்லப்பட்ட வழியெங்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று இந்திய மற்றும் அர்ஜென்டினா நாட்டுக் கொடிகளை அசைத்து மாரடோனாவை வரவேற்று மகிழ்ந்தனர்.
மாரடோனாவின் வருகையையொட்டி கொல்கத்தா நகரமே திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.
மாரடோனா வருகையையொட்டி 5000க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் அதி விரைவுப்படை வீரர்கள், கமாண்டோக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இன்று கொல்கத்தாவின் மஹேஸ்தலாவில் உள்ள மாரடோனா இந்திய கால்பந்துப் பள்ளிக்கு மாரடோனா அடிக்கல் நாட்டுகிறார். இந்த இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் மாரடோனா அழைத்துச் செல்லப்படுகிறார்.
மாரடோனாவுடன் அவரது தோழி வெரோனிகாவும் உடன் செல்கிறார். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஹோட்டலுக்குத் திரும்பும் மாரடோனா அங்கு செய்தியாளர்களைச் சந்திக்கிறார். பின்னர் சால்ட்லேக் ஸ்டேடியத்தில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
முன்னதாக வெளிநாட்டு அமைச்சர்கள் லெவன் அணிக்கும், முதல்வர் லெவன் அணிக்கும் இடையிலான காட்சி கால்பந்துப் போட்டியை மாரடோனா தொடங்கி வைக்கிறார்.
இந்திய வீரர்கள் தவிர பல்வேறு நாட்டு பிரபல வீரர்கள் இந்தப் போட்டியில் விளையாடவுள்ளனர்.
பின்னர் நடைபெறும் பாராட்டு விழாவை மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைக்கிறார்.
சால்ட் லேக் ஸ்டேடியத்தின் தங்கத்தால் ஆனி மாதிரி, மாரடோனாவுக்கு பரிசாக அளிக்கப்படவுள்ளது.
நாளை மாரடோனா அன்னை தெரசா இல்லத்திற்குச் செல்கிறார். அங்கு தெரசா படத்திற்கு அஞ்சலி செலுத்துகிறார்.
மேலும் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவை அவரது இல்லத்திற்குச் சென்று சந்திக்கிறார்.
பின்னர் மோகன் பகான் மைதானத்தில் நடைபெறும் கால்பந்து கிளினிக்கிலும் அவர் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் மாரடோனா தங்கியுள்ள ஹோட்டலில் இரவு ஏலம் நடைபெறும். இதில், மாரடோனா கையெழுத்திட்ட ஐந்து ஜெர்சிகளும், கால்பந்துகளும் ஏலம் விடப்படும். இந்த ஏலத்தில் கிடைக்கும் தொகை இந்திய கால்பந்து சங்கத்திற்கு அளிக்கப்படுகிறது.