600 நிறுவனங்கள் மூடல்: மேலும் 2,000 நிறுவனங்களுக்கு மூடுவிழா!
இதுவரை நாடு முழுவதும் 600 உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தி முடங்கிவிட்டது. தொழிற்சாலைகளை இழுத்து மூடிவிட்டதாக அவை அறிவித்துள்ளன. மேலும் 2000 ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்த ஆலோசித்து வருகின்றன.
வாகனக் கடன் வட்டி கடுமையாக உயர்ந்துவிட்டதால் வாகனங்கள் விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி மற்றும் தவணை தவறுவோர் அதிகரிப்பால் வாகனக் கடன் அளிப்பதை பல வங்கிகளும் நிறுத்தி விட்டன.
இந்நிலையில், தேவை குறைந்ததால் முன்னணி நிறுவனங்களான டாடா, மகிந்திரா உட்பட வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கூட, உற்பத்தியைக் குறைத்து வருகின்றன. ஜாம்ஷெட்பூர் ஆலையை கடந்த மாதத்தில் டாடா மோட்டார்ஸ் இரண்டு முறை 8 நாட்கள் வரை மூடியது.
இதனால், அந்த தொழிற்சாலையைச் சுற்றி அமைந்துள்ள உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. உற்பத்தி அதிகரிக்கப்படாததால், அவற்றில் சுமார் 600 நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. ஜாம்ஷெட்பூர் டாடா ஆலையில் தினமும் 500 ஆக இருந்த வர்த்தக வாகனங்கள் தயாரிப்பு, இப்போது 125 முதல் 150 ஆகக் குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உதிரிபாகக் கொள்முதலும் குறைந்துவிட்டது.
இதேபோன்ற நிலை முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான ஹூண்டாய், லேலண்ட் போன்றவற்றிலும் நிலவுகிறது.
வாகன தயாரிப்பில் முன்னணி வகிக்கும் சென்னை, உதிரி பாகத் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஓசூர் உட்பட பல நகரங்களில் ஏராளமான தொழிற்சாலைகள் உர்பத்தியை நிருத்தியுள்ளன அல்லது குறைத்து வருகின்றன.
இதுபற்றி சிறு, குறு மற்றும் நடுத்தர வாகன தொழிற்சாலைகளுக்கான இந்திய கூட்டமைப்பின் பொதுச் செயலர் அனில் பரத்வாஜ் கூறுகையில், ஆர்டர்கள் கடுமையாக சரிந்து விட்டன. உதிரிபாக தயாரிப்பாளர்களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையும் கிடைக்கவில்லை. எனவே, தினசரி செலவுக்கே சிறிய நிறுவனங்கள் திண்டாடும் நிலை உள்ளது. எனவே, நாடு முழுவதும் 2,000 சிறு உதிரிபாக நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் உள்ளன என்றார்.