திருவண்ணாமலையில் நாளை மகா தீபம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத் திருவிழா நாளை (11ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு சுவாமி சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.
5அடி உயரமும், 750 கிலோ எடையுள்ள செம்பு கொப்பரையில் அர்த்தநாரீஸ்வரர் ஓவியம் வரையப்பட்டு புதிய காடா துணியால் செய்யப்பட்ட திரியால் பக்தர்களால் அளிக்கப்பட்ட நெய்யை ஊற்றி இந்த தீபம் ஏற்றப்படும்.
இந்த கொப்பரை இன்று பஞ்சமூர்த்தி சன்னதிகளில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு பின்னர் கோவில் யானை ருக்குவிடம் ஆசிர்வாதம் வாங்கப்பட்டு மலை உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.
நாளை மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்படுகிறது. மகா தீபத்தை பர்வதகுள ராஜ வம்சத்தினர் ஏற்றுவர்.
இந்த தீப திருவிழாவில் பங்கேற்க தமிழகம் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி திருவண்ணாமலையில் 9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களிலிருந்து 1800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றனர்.
விழாவையொட்டி 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.