குடும்ப தகராறு: பஸ் ஸ்டாப்பில் நின்றவர் வெட்டி கொலை
நெல்லை: நெல்லை அருகே குடும்பத் தகராறில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
நெல்லை அருகேயுள்ள கரையிருப்பு நடுத்தெருவை சேர்ந்த சுப்பையா மகன் மூக்காண்டி. மானூரில் உள்ள சுண்ணாம்பு கம்பெனியில் வேலை பார்த்து வந்த இவருக்கு வேதமணி சந்தியா என்ற மனைவியும், 2 மகள், 2 மகன் உள்ளனர்.
முதல் மகள் சுதா செல்வியை ராஜவல்லிபுரத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். இவர் கல்லிடைக்குறிச்சியில் உள்ள டாஸ்மக் கடையில் வேலை பார்த்து வந்தார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 2 மாதத்திற்கு முன் சுதாசெல்வி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கணவருடைய கொடுமை காரணமாக மகள் தற்கொலை செய்து கொண்டார் என்று தாழையுத்து போலீசில் புகார் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் தனது மகளுக்கு கொடுத்த நகை மற்றும் பணத்தை திரும்ப தருமாறு மூக்காண்டி மருமகன் முருகனிடம் கேட்டார். அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இதற்கிடையில் வேதமணி சத்தியாவுக்கும், மூக்காண்டிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். வேதமணி சத்தியா கரையிருப்பு ஆர்எஸ்எஸ் நகரில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மூக்காண்டி மானூரில் உள்ள சுண்ணாம்பு கம்பெனிக்கு வேலைக்கு செல்ல பஸ் ஏறுவதற்காக கரையிருப்பு அருகே உள்ள தனியார் நூற்பாலை பஸ்ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு அரிவாளுடன் வந்த மர்ம நபர் ஒருவர் அவரை சாரமரியாக வெட்டினார். கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் வெட்டப்பட்ட மூக்காண்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அதன்பிறகு அந்த நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
தகவல் அறிந்ததும் மாநகர துணை கமிஷனர் ஜெயசந்திரன், உதவி கமிஷனர் ஞானசேகரன், தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.