மும்பைக்கு தீவிரவாதிகளை வாழ்த்தி அனுப்பி வைத்த ஹபீஸ் சயீத், லக்வி
மும்பை: மும்பையில் தாக்குதல் நடத்த தேர்வு செய்யப்பட்ட பத்து தீவிரவாதிகளையும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத், ஜாகி உர் ரஹ்மான் லக்வி உள்ளிட்ட நான்கு முக்கிய தலைவர்கள் வாழ்த்தி அனுப்பி வைத்ததாக மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மும்பை குற்றப் பிரிவு இணை ஆணையர் ராகேஷ் மரியா கூறுகையில், ஹபீஸ் சயீத், ஜாகி உர் ரஹ்மான் லக்வி மற்றும் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த அபு ஹம்சா, காபா ஆகியோர்தான் மும்பை சதிச் செயலுக்கு முக்கிய காரணம். அவர்கள் தான் திட்டம் தீட்டி, அதை அமல்படுத்தியவர்கள். தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்ததும் இவர்கள்தான்.
கைது செய்யப்பட்ட கஸாப் போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், லஷ்கர் இ தொய்பாவை நிறுவியவரும், அதன் மறுமுகமான ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவருமான சயீத், முரித்கே என்ற இடத்தில் உள்ள தீவிரவாத முகாமில் தங்களைச் சந்தித்து ஊக்கம் தரும் உரை நிகழ்த்தியதாக தெரிவித்துள்ளான்.
லக்விதான் மும்பையில் தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தை தீட்டி அதற்கான பயிற்சி மற்றும் பிற ஏற்பாடுகளைச் செய்வதன் என்றும் கஸாப் தெரிவித்துள்ளான்.
மேலும், நவம்பர் 22ம் தேதி கராச்சியிலிருந்து பத்து தீவிரவாதிகளும் மும்பைக்குக் கிளம்பியபோது அவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்துள்ளான் லக்வி.
பாகிஸ்தானைச் சேர்ந்த அல் ஹூசைன என்ற படகு மூலம்தான் தீவிரவாதிகள் கராச்சியிலிருந்து கிளம்பியுள்ளனர். இந்தப் படகு லக்விக்குச் சொந்தமானதாகும்.
பத்து தீவிரவாதிகளுக்கும் பயிற்சி வகுப்புகள் நடந்தபோது அதில் அபு ஹம்சாவும், காபாவும் முழுமையாக கலந்து கொண்டு கூடவே இருந்துள்ளனர்.
பாகிஸ்தானின் நான்கு இடங்களில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றார் மரியா.