ஜமாத் உத் தவாவுக்கு ஐ.நா. தடை-சயீத், லக்வி சர்வதேச தீவிரவாதிகள்!
ஜமாத் உத் தவா அமைப்பு சர்வதேச பயங்கரவாத அமைப்பாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சயீத், லக்வி தவிர ஹாஜி முகம்மது அஷ்ரப், ஜாகி உர் பாஷிக் ஆகியோரும் சர்வதேச பயங்கரவாதிகளாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஜமாத் அமைப்பை தடை செய்ய வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது நினைவிருக்கலாம். அப்படி விதிக்கப்பட்டால், ஜமாத் அமைப்பின் நிறுவனரான சயீத் உள்ளிட்டோர் கைது செய்யப்படுவர். அவர்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்று பாகிஸ்தானும் உறுதியளித்திருந்தது.
இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஜமாத் அமைப்பை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எடுத்த முடிவில், அனைத்து உறுப்பு நாடுகளும் இந்த அமைப்பின் சொத்துக்களை முடக்கி வைக்க வேண்டும். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் உலகின் எந்தப் பகுதிக்கும் செல்ல அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்கு ஆயுதம் வழங்குவதையும் தடை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.