ஆழியாற்றில் முதலைகள் அட்டகாசம் - பிடிக்க தீவிரம்
கோவை: ஆழியாற்றில் முதலைகள் நடமாட்டம் இருப்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அந்த முதலைகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை ஆழியாற்றில் முதலைகள் நடமாட்டம் இருப்பதாகவும், வெயில் நேரத்தில் பாறையின் மேல் முதலைகள் இருந்ததை பார்த்ததாகவும் விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனைமலை பழைய சுடுகாட்டுப்பகுதியில் உள்ள ஆழமான பகுதி மற்றும் சிங்காநல்லூர் பகுதிகளிலும் முதலைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிங்கா நல்லூர் ஆழியாற்றங்கரை பகுதியில் 10 அடி நீள முதலை வாய் பிளந்த நிலையில் ஆக்ரோஷமாக உலா வந்ததை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் வருவதற்குள் முதலை வேகமாக போய் விட்டது.
அந்த முதலையை பிடிப்பதற்காக அமராவதியில் உள்ள முதலைப் பண்ணைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து ஊழியர்கள் இன்று சிங்காநல்லூர் வருகின்றனர். அவர்கள் முதலையை பிடிக்கும் நடவடிக்கையை மேற்கொள் கிறார்கள்.
முதலைகள் பிடிபடும் வரை ஆனைமலை ஆழியாற்றங்கரையில் உள்ள பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பொள்ளாச்சி வனச்சரகர் வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.