புலிகள் தாக்குதலில் ராணுவத்தினர் பலி 120 ஆனது-பின்வாங்கி ஓடுகிறது
கிளிநொச்சி: கிளிநொச்சியில் ராணுவம் மேற்கொண்டுள்ள இரு முனைத் தாக்குதலுக்குப் பலத்த அடி கிடைத்துள்ளது. விடுதலைப் புலிகளின் தாக்குதலில் பலியான ராணுவத்தினர் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ராணுவம் பின் வாங்கி மலையாளபுரத்திற்கே திரும்பிப் போய் விட்டது.மேற்கு கிளிநொச்சியில், புதுமூரிப்பு மற்றும் தெற்கு கிளிநொச்சியில், அறிவியல் நகர் பகுதிகள் வழியாக உள்ளே நுழைய ராணுவம் முயன்றது. ஆனால் இரு முனைகளிலும் அது விடுதலைப் புலிகளின் அதிரடித் தாக்குதலை எதிர்கொள்ள நேரிட்டது.
புதன்கிழமை இங்கு நடந்த கடும் சண்டையில் ராணுவத்தினர் 89 பேர் கொல்லப்பட்டனர். 280க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் மேலும் பலர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 120 உயர்ந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பான புகைப்படங்களையும் புலிகள் வெளியிட்டுள்ளனர். அதில் புதிதாக ராணுவத்தில் சேர்க்கப்பட்ட பல இளைஞர்களும் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது.
கடும் சண்டை நடப்பதை ஒத்துக் கொண்டுள்ள இலங்கை ராணுவம், தங்களது தரப்பில் 20 பேர் மட்டுமே உயிரிழந்ததாகவும், விடுதலைப் புலிகள் தரப்பில் 27 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.
புதுமூரிப்பு பகுதியில்தான் ராணுவம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. இங்கு சிங்கள ராணுவ வீரர்களின் சடலங்கள் சிதறிக் கிடக்கின்றன.
அதேபோல அறிவியல் நகர் பகுதியில் ஊடுறுவ முயன்று தோற்ற ராணுவத்தினர், மலையாளபுரத்திற்கு விரட்டப்பட்டுள்ளனர்.