தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு
நெல்லை: பாபநாசம் அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்வதால் பாபநாசம் அணைக்கு வந்து கொண்டிருந்த தண்ணீரின் அளவு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. 143 அடி கொள்ளவு கொண்ட இந்த அணை நிரம்பி விட்டதால் உபரி நீர் ஷட்டர்கள் வழியாக திறந்து விடப்பட்டது.
பாபநாசம் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு நேற்று அதிகாலை 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
நேற்றைய நிலவரப்பட்டி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 141.80 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4,941 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 4,666 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணைப்பகுதியில் மேலணையில் 68 மி.மீ, கீழலணையில் 52 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 148.95 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையில் 103.40 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி அதிகரித்து 106.30 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 3,190 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 35 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கடனா நதி அணையிலிருந்து வினாடிக்கு 994 அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் கடனாநதியிலிருந்து வெளியேறும் தண்ணீரும் தாமிரபரணி ஆற்றில் கலப்பதால் தாமிரபரணியில் வெள்ளம் கரை புரண்டு ஒடுகிறது.
இதனால் நெல்லை, அம்பை, பாளை தாலுகாக்களில் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.