வேட்பாளர்கள் தேர்வு: ஜெ-சசி கொடநாடு பயணம்
முதலில் பாஜகவுடன் கூட்டணிக்குத் திட்டமிட்டார் ஜெயலலிதா. இதையடுத்து இடதுசாரிகள் விஜய்காந்துடன் கூட்டணி அமைக்கத் திட்டமிட்டனர்.
இதையடுத்து வாக்கு வங்கியுள்ள இடதுசாரிகளை தன் பக்கம் இழுத்த ஜெயலலிதா, தமிழகத்தில் சுத்தமாக மக்கள் ஆதரவே இல்லாத பாஜகவை கழற்றிவிட்டுவிட்டார்.
தேர்தலுக்கு முன் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து அதிக இடங்களில் வெல்வது, தேர்தலுக்குப் பின் மத்தியில் ஏற்படும் நிலைமையைப் பொறுத்து பாஜக கூட்டணிக்குத் தாவுவது. இது தான் ஜெயலலிதாவின் திட்டம் என்கிறார்கள்.
தேர்தலுக்குப் பின் அதிமுக, பாஜகவிடம் செல்லும் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனே ஒப்புக் கொண்டுவிட்டார்.
இதில் பாஜகவுக்கும் லாபமே. அதிமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் வெற்றி வாய்ப்பு என்பது அந்தக் கட்சிக்குக் குறைவே. தேர்தலுக்குப் பின் எப்படியும் பாஜக பக்கம் வரப் போகும் அதிமுக அதிக இடங்களில் வெல்ல வேண்டுமானால், கூட்டணியில் இருந்து பாஜக விலகி இருப்பதே நல்லது என்பதையும் 8 சதவீத வாக்குகளை வைத்துள்ள இடதுசாரிகள் அதிமுகவுடன் இணைவதே நல்லது என்பதையும் பாஜக, அதிமுக இருவருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பத்திரி்க்கையாளர் ஒருவர் எடு்த்துச் சொன்னார் என்கிறார்கள்.
இதையடுத்தே அதிமுக, இடதுசாரிகளுடன் கூட்டு சேர்ந்தது.
கூட்டணி அமைப்பதில் பிற கட்சிகளை முந்துவிட்ட ஜெயலலிதா மக்களவைத் தேர்தலி்ல் போட்டியிடும் தனது கட்சியின் வேட்பாளர்களை தேர்வு செய்யும் வேலையை முடுக்கி விட்டுள்ளார்.
தீவிர ஜோதிட நம்பிக்கை கொண்ட ஜெயலலிதாவுக்கு தை மாதத்தில் தேர்தல் பிரசாரத்தை துவக்குமாறு அறிவுரையும் தரப்பட்டது. இதனால் இம் மாத இறுதிக்குள் வேட்பாளர் பட்டியலை அவர் முடிவு செய்யவுள்ளார்.
இதற்காக சசிகலாவுடன் நாளை (13ம் தேதி) கொடநாடு எஸ்டேட்டுக்கு புறப்படுகிறார் ஜெயலலிதா.
ஏற்கனவே தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் அதிமுக தலைமை அலுவலகத்தில் ரூ.10,000 கட்டி மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதுவரை 500க்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துவிட்டன.
இதற்கிடையே இரு நாட்களுக்கு முன் போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்னையனிடம் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் வேலையைத் துவக்கும்படி ஜெயலலிதா உத்தரவிட்டுவிட்டார்.
அதே போல பன்னீர்செல்வம், ஜெயக்குமார், மதுசூதனன் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய ஜெயலலிதா வெற்றி வாய்ப்புளள்ள தொகுதிகள், வேட்பாளர்களை அடையாளம் காண உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் தேர்தல் சுற்றுப் பயண திட்டத்தை வழக்கம்போல் செங்கோட்டையன் வகுக்க ஆரம்பித்துவிட்டார்.
சசிகலாவுடன் 20 நாட்கள் தங்கியிருக்கும் ஜெயலலிதா, வேட்பாளர் பட்டியலை இறுதி செய்துவிட்டே திரும்பவுள்ளார். வந்தவுடன் பிரச்சரத்தையும் ஆரம்பிக்கவுள்ளார்.
இதற்கிடையே தனது கட்சியின் முக்கியத் தலைவர்களிடம் பேசிய ஜெயலலிதா, கடைசி நேரத்தில் பாமகவும் நம் கூட்டணிக்கு வந்துவிடும் என்று கூறியிருக்கிறார்.
இதைக் கேள்விப்பட்டு திமுக தரப்பு 'திக் திக் திக்கில்' உள்ளது.