ஜெயலலிதா தமிழரல்ல- கி.வீரமணி
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் கருணாநிதி உரையாற்றிய போது, மிகுந்த கவலையோடு தமிழ்நாட்டு மக்கள் சிந்தனைக்காக, தமிழ் இன உணர்வாளர்கள், முற்போக்குவாதிகள் சிந்தனைக்காக ஒரு கருத்தை முன்வைத்தார்.
இன உணர்வற்று மரத் தமிழர்களாகி, கூட்டணி சீட்டுகளுக்காக இன எதிரிகளிடம் (அதிமுக) சரண் அடைந்துவிட்ட தமிழர்களும் (கம்யூனிஸ்டுகள்) கூட அந்த 'ஆரிய மாயை'யில் இருந்து வெளியேறி சிந்திக்கும்படி முதல்வர் கருணாநிதி தமிழ் உணர்வாளராக சுட்டி இனமான கடமை ஆற்றியுள்ளார்.
தமிழ்நாட்டில் அண்ணா பெயரில் கட்சி (அதிமுக). அதனையே "ஆரிய மாயை'' (ஜெயலலிதா) அபகரிப்பு. எந்த சொல்லுக்காக சிங்கள ராணுவ தளபதியை கண்டிக்கிறார்களோ, அதே கருத்தினை வெளிப்படையாக அறிக்கைகள் மூலம் பொறுப்பான ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்பதையும் புறந்தள்ளிவிட்டு, இலங்கை தமிழ் மக்களுக்காக தமிழக முதல்வர் வசூலித்த நிவாரண நிதி சேகரிப்பை கொச்சைப்படுத்தினார்.
ஆனால் உண்மை என்ன? படங்களுடன் செய்திகள் வந்தனவே. ஜெயலலிதாவின் புளுகு பலூன் வெடித்து சிதறிவிட்டதே.
சிங்களர்களின் குரலைத்தானே இவர் சதா ஒலிக்கிறார். காரணம் என்ன? தமிழரல்லர் என்பதுதானே. தமிழ்நாட்டு வாக்காளர்களை எவ்வளவு அடிமுட்டாள்கள் என்று அவர் நினைத்திருக்கிறார்?.
இவ்வளவையும் மறந்துவிட்டு, அந்த அணி பக்கம் ஓடினால் இரண்டொரு சீட்டுகள் கிடைக்கும் என்று ஓடுகிறார்களே- தமிழன் நிலை இவ்வளவு கேவலமாக ஆகலாமா?
ஜெயலலிதா, சுப்பிரமணிய சாமி, சோ, கல்கி- பார்ப்பன ஊடகங்கள் இன அடிப்படையில் மன அடிப்படையில் ஒன்றாக நிற்கின்றன. தமிழர்களின் கடமை என்ன?.
சிங்களருக்கு ஆதரவு குரல் கொடுப்பவருடன் கூட்டு வைத்துக் கொண்டு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முழங்குவோம் என்பது அசல் இரட்டை வேடம் அல்லவா? ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு காட்டும் போது நம்மில் எவரும் ஈனத் தமிழர்களாக மாறிவிடக்கூடாது என்று கி.வீரமணி கூறியுள்ளார்.