அமைதிக்கான நோபல்-வென்றார் பின்லாந்து முன்னாள் அதிபர்
ஆஸ்லோவில் நடந்த விழாவில் அதிசாரிக்கு, நோபல் பரிசு வழங்கப்பட்டது.
கடந்த முப்பது ஆண்டுகளாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் அமைதியை ஏற்படுத்த அதிசாரி பாடுபட்டு வருவதை கெளரவிக்கும் வகையில் இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.
செர்பியாவிலிருந்து கொசோவோவுக்கு விடுதலை கிடைக்க முக்கிய காரணகர்த்தா அதிசாரிதான். ஐரோப்பிய யூனியன் முன் வைத்த அமைதி உடன்பாட்டை உருவாக்கியவர் அதிசாரிதான். இதன் விளைவாக கொசோவோ விடுதலை பெற்றது.
மேலும் இந்தோனேசியாவில், அரசுப் படைகளுக்கும், புரட்சிக்காரர்களுக்கும் இடையே 30 ஆண்டுகளாக நடந்து வந்த மோதலையும் இவர்தான் தலையிட்டு தீர்த்து வைத்து உடன்பாடு ஏற்பட வழி வகுத்தார்.
ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் மோதல்களை ராணுவ ரீதியாக தீர்க்க முடியாது எனவும் அதிசாரி தெரிவித்துள்ளார். அங்கும் அமைதியை ஏற்படுத்த தான் பாடுபடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகளில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெறும் முதல் ஐரோப்பியர் அதிசாரி என்பது குறிப்பிடத்தக்கது.