கடற்படை கமோண்டோக்கள் அதிரடி-23 கடற் கொள்ளையர்கள் கைது
டெல்லி: சோமாலியாவில் இந்திய கடற்படை கமாண்டோக்கள் அதிரடி தாக்குதல் நடத்தி 23 சோமாலிய, ஏமன் நாட்டு கடல் கொள்ளையர்களை செய்தனர். அவர்களிடமிருந்து ஏகே 47 துப்பாக்கிகள், கிரனைடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஏடன் வளைகுடாவில் இந்த கடல் கொள்ளையர்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியக் கப்பல், இந்தியப் பணியாளர்கள் உள்ள கப்பல் உள்பட இந்த ஆண்டில் மட்டும் நூற்றுக்கணக்கான கப்பல்களை இந்தக் கும்பல் கடத்தி கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளது.
இதையடுத்து அந்த வளைகுடா பகுதியில் இந்திய கடற்படையின் போர்க் கப்பலான ஐஎன்எஸ் மைசூர் ரோந்து சுற்றி வருகிறது. இதுவரை பல நாட்டு கப்பல்களையும் இந்தக் கொள்ளையர்கள் தாக்குதலில் சிக்கிவிடாமல் காத்து பத்திரமாக அனுப்பி வைத்துள்ளது.
இந் நிலையில் இன்று எத்தியோப்பியாவைச் சேர்ந்த எம்.வி.ஜிபே என்ற சரக்குக் கப்பல் 2 படகுகளில் வந்த கடற் கொள்ளையர்கள் சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து அந்த கப்பலின் மாலும் உதவி கேட்டு எஸ்ஓஎஸ் சிக்னலை அனுப்பினார்.
இதையடுத்து அந்தப் பகுதியில் இருந்த இந்தியக் கப்பல் அங்கு விரைந்தது. அந்தக் கப்பலில் கடற்படை கமாண்டோக்களும் இருந்தனர். அவர்கள் ஹெலிகாப்டரில் விரைந்து வந்து கொள்ளையர்களை திரும்பிச் செல்லுமாறு எச்சரித்தனர்.
ஆனால், அவர்கள் ஹெலிகாப்டரை நோக்கி சுடவே போர்க் கப்பல் விரைந்து வந்தது. வானிலிருந்தும் கப்பலில் இருந்தும் தாக்குதல் நடத்திய கடற்படையினர் படகுகளில் இருந்த 23 கொள்ளையர்களைப் பிடித்தனர். அவர்களிடமிருந்து ஏகே 47 துப்பாக்கிகள், ரைபிள்கள், கிரனைட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதானவர்களில் 12 பேர் சோமாலியாவை சேர்ந்தவர்கள், 11 பேர் ஏமனை சேர்ந்தவர்கள்.