தலித் நிலம்-தமிழகம் மீது மத்திய அமைச்சர் புகார்
டெல்லி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நிலங்களுக்கு அமல்படுத்தப்படும் நீர்ப்பாசனத் திட்டங்களில் ஒன்றைக் கூட தமிழகம் செயல்படுத்தவி்ல்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் பழனி தொகுதி காங்கிரஸ் எம்பியான கார்வேந்தன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களில் நிலம் வைத்திருப்போர் இருந்தால், அவர்களது நிலத்திற்கு நீர்ப்பாசன வசதி செய்து தருவதற்கு மத்திய அரசின் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வழிவகை உள்ளது. அந்த அடிப்படையில் தமிழகத்தில் எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ரகுவன்சிங் பிரசாத்,
நாடு முழுவதும் மத்திய அரசின் சார்பில் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களில் நிலம் வைத்திருப்போருக்கு நீர்ப்பாசன வசதி செய்து தரும் திட்டங்களும் அமலாக்கப்பட்டு வருகின்றன.
2008-09ம் ஆண்டில் ஆந்திர மாநிலத்தில் 8,634 திட்டங்களும், மத்திய பிரதேசத்தில் 54,658 திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், என்ன காரணத்தினாலோ, தமிழகத்தில் ஒரு திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை.
இதுகுறித்து பலமுறை தமிழக அரசை தொடர்பு கொண்டு கேட்ட போதிலும், இதுவரை பதில் இல்லை. மாநில அரசு தான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும்.
தவிர, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை நாட்டிலேயே அதிகளவில் பயன்படுத்திக் கொண்ட மாநிலம் ஆந்திரா தான். இந்த திட்டத்திற்காக அந்த மாநிலத்துக்கு ரூ. 2,417 கோடி நிதியளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு இதுவரை ரூ. 928 கோடி நிதியளிக்கப்பட்டுள்ளது என்றார்.