For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாக். கண் துடைப்பு வேலைகளால் பயனில்லை-இந்தியா

By Staff
Google Oneindia Tamil News

Pranab Mukherjee
டெல்லி: தீவிரவாத அமைப்புகளை தடை செய்வது, அதன் தலைவர்களை வீட்டுக் காவலில் வைப்பது போன்ற கண்துடைப்பு வேலைகள் எல்லாம் உதவாது. அந்த அமைப்புகளை அடியோடு ஒழித்துக் கட்டும் வேலைகளை பாகிஸ்தான் செய்ய வேண்டும் என அமெரிக்காவிடம் இந்தியா கூறியுள்ளது.

டெல்லி வந்துள்ள அமெரிக்க துணை வெளியுறவு அமைச்சர் ஜான் நெக்ரோபாண்டேவிடம் பேசிய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இதைத் தெரிவித்தார். மேலும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸ்ஸா ரைசுடனும் பிரணாப் தொலைபேசியில் பேசினார்.

அமெரிக்காவிடம் பிரணாப் விளக்கம்:

அவர்களிடம், லஷ்கர் ஏ தொய்பாவின் இன்னொரு முகமான ஜமாத் உத் தாவாவின் தலைவர் ஹபீஸை கைது செய்து வீட்டுக் காவலில் வைப்பதாலோ, அதன் சில அலுவலங்களுக்கு சீல் வைப்பதாலோ மட்டும் நிலைமை மாறிவிடாது, அவர்கள் தங்களது அமைப்பின் பெயரை மீண்டும் மாற்றிக் கொண்டு செயல்பட எந்தத் தடையும் இல்லை என்பதை முகர்ஜி சுட்டிக் காட்டினார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் ஆகியோரையும் நெக்ரோபாண்டே சந்தித்துப் பேசினார்.

ஜெர்மன் அமைச்சர் வருகை:

இதற்கிடையே ஜெர்மன் உள்துறை அமைச்சர் வோல்வ்கேங்கும் டெல்லி வந்து பிரதமரையும் முகர்ஜியையும் நாராயணனையும் சந்தித்து மும்பை தாக்குதல் குறித்துப் பேசினார்.

இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், தடை விதிப்பதால் மட்டும் தீவிரவாதத்தை தடுத்துவிட முடியாது. அடுத்த நாட்டில் போய் தாக்குதல் நடத்தாத அளவுக்கு அந்த அமைப்புகளின் செயல்பாட்டை பாகிஸ்தான் முடக்க வேண்டும்.

இந்த தீவிரவாத அமைப்புகளின் திட்டம் இந்தியாவில் இந்து-முஸ்லீம்களிடையே மோதலை ஏற்படுத்துவது தான். மும்பை தாக்குதலையடுத்து ராணுவரீதியிலான நடவடிக்கையில் இறங்காமல் இந்தியா தனது பொறுப்புணர்வைக் காட்டியது பாராட்டத்தக்கது. இதை பாகிஸ்தான் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை:

இதற்கிடையே பாகிஸ்தான் மீது ராணுவத் தாக்குதல் எதையும் நடத்தாத வகையில் இந்தியாவிடம் தாங்கள் பேசி வருவதாகவும், அதே நேரத்தில் இந்தியாவை சமாதானப்படுத்தும் வகையில் தீவிரவாத அமைப்புகள் மீது உண்மையிலேயே தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானிடம் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

'தீவிரவாத நாடாக அறிவி்த்திருப்பார்கள்':

இதற்கிடேயே ராவல்பிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் செளத்ரி அகமத் முக்தார்,

ஜமாத் உத் தாவாவுக்கு அரசு தடை விதி்த்திருக்காவிட்டால் பாகிஸ்தானை ஐ.நா. சபை தீவிரவாத நாடாகவே அறிவித்திருக்கும். எதிரியுடன் (இந்தியாவை சொல்கிறார்) சண்டை போடலாம். ஆனால், ஒட்டு மொத்த உலகத்துடனும் நம்மால் மோத முடியாது என்று கூறியுள்ளார்.

இதன்மூலம் ஐ.நா. தடைக்கு பயந்தே இந்த குறைந்தபட்ச நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்திருப்பது உறுதியாகிறது. மனதார அந்த நாடு தீவிரவாதிகளை ஒழிக்கும் வேலைகளில் இன்னும் இறங்கவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X