ஜெவை பாராட்டும் சிவகாமி-திமுக மீது தாக்கு
நெய்வேலி: தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு என்பது கண்துடைப்பு வேலை என பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலப் பொதுச்செயலர் சிவகாமி கூறினார்.
ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த சிவகாமி நெய்வேலியில் நிருபர்களிடம் பேசுகையில்,
பெண்ணுக்குப் பெண் விரோதி இருக்க மாட்டார்கள். ஜெயலலிதா பல சவால்களையும், பின்னடைவுகளையும் சந்தித்து வெற்றி கண்ட மிகச் சிறந்த சாதனையாளர்.
தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி, வரும் லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் இணையுமா என்பதை தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தெரிந்து கொள்வீர்கள்.
வெறும் 1.5 சதவீதம் கூட வாக்கு இல்லாத விடுதலை சிறுத்தைகள் மற்றும் புதிய தமிழகம் அமைப்புகளுடன் எங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமின்றி, விஜயகாந்த் கட்சியிலிருந்தும் ஏராளமானோர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு என்பது கண்துடைப்பு வேலை. தமிழக அரசு ஆதிதிராவிட மக்களுக்கான 18 சதவீத ஒதுக்கீட்டையே முறையாக அமல்படுத்தவில்லை. குறிப்பாக, 18 சதவீத சிறப்புக் கூறு திட்டத்தின் வாயிலாக ஒதுக்கப்பட வேண்டிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
அருந்ததியினருக்கு அமைச்சரவை மற்றும் எம்எல்ஏ சீட்டுகளில் 3 சதவீதம் ஒதுக்கீடு செய்வார்களா? என்றார் சிவகாமி.