இந்தியாவுடன் அணு ஒப்பந்தம் - யுரேனியத்தில் நம்பர் 2வான கஜகஸ்தான் விருப்பம்
இந்தியாவின் அணுத் தனிமைக்கு சமீபத்தில் சர்வதேச அணு சக்தி ஏஜென்சியும், அணுப் பொருள் சப்ளை குழுமம் ஆகியவை முற்றுப்புள்ளி வைத்தன.
இதையடுத்து பிரான்ஸுடன் இந்தியா முதலில் சிவில் அணு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. அடுத்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
பின்னர் சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் மெத்வதேவ் இந்தியா வந்திருந்தபோது அந்நாட்டுடனும் அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிலையில், உலகிலேயே யுரேனியம் இருப்பில் 2வது இடத்தை வகிக்கும் கஜகஸ்தான் நாடும், இந்தியாவுடன் அணு சக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 26ம் தேதி இந்திய குடியரசுத் தின விழாவி்ன் முக்கிய விருந்தினராக கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நஸர்பயேவ் கலந்து கொள்கிறார். அவரது இந்திய வருகையின்போது இந்த சிவில் அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.
இதுதொடர்பாக இரு நாட்டு அணு சக்தி அமைப்புகளும் பேச்சுவார்த்தையைத் தொடங்கி விட்டன. அணு உலைகள் அமைப்பது, யுரேனிய விநியோகம் மற்றும் இரு நாடுகளும் இணைந்து அணு எரிபொருள் அகழ்வுப் பணிகளில் ஈடுபடுவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் இடம் பெறும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து கஜகஸ்தான் நாட்டு தூதர் கைராத் உமரோவ் கூறுகையில், இதுகுறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். இப்போது விரிவாக எதையும் கூறுவதற்கில்லை என்றார்.
கஜகஸ்தானுடன் அணு சக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவது நமது சிவில் அணு சக்தித் திட்டங்களுக்கு பெரும் பலனைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.