தீவிரவாதிகளுக்கு இடம் தரக் கூடாது: பாக்.குக்கு பிரதமர் கண்டிப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குந்த்ரூ என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், பாகிஸ்தானுடனடான அனைத்துப் பிரச்சினைகளையும் சுமூகமான முறையில், பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ள இந்தியா உறுதியுடன் உள்ளது.
ஆனால், பாகிஸ்தான் தனது பிராந்தியத்தையும், தனது மண்ணையும், தீவிரவாத செயல்களுக்கு பயன்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களையும், நடவடிக்ககைளயும், தீவிரவாத குழுக்களையும் அது தடை செய்ய வேண்டும். அதுவரை அமைதிப் பேச்சுவார்த்தை என்பது சாத்தியமில்லாதது.
நமது அமைதியையும், பொறுமையாயும், பலவீனமாக யாரும் கருதி விடக் கூடாது.
மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்தான் என்பது தெளிவாகியுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான நமது போர் தொடரும்.
இரு நாட்டு எல்லைக் கோட்டையும் மாற்றி அமைப்பது சாத்தியமில்லாதது. இருப்பினும் இரு நாடுகளுக்கும் இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை நம்மால் குறைக்க முடியும்.
இரு நாட்டு மக்களிடையேயான தொடர்புகளை அதிகரிக்கவும், வியாபார உறவுகளை வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையே மேலும் பல தொடர்புகள் உருவாக்கப்படும் என்றார் அவர்.