அத்வானிக்கு நிகர் யாருமில்லை-வெங்கையா
டெல்லி: பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அத்வானியின் திறமைக்கு யாரும் நிகராக மாட்டார்கள் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
பாஜக இளைஞர் அணி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
மத்தியில் ஆட்சி மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பது இளைஞர்களின் விருப்பமாக உள்ளது. முதல் முறையாக வாக்களிக்கவுள்ள 18 முதல் 20 வயது வரையுள்ளவர்களிடம், இளைஞரணியினர் ஓட்டளிப்பதின் முக்கியத்துவத்தை விளக்கிச் சொல்ல வேண்டும்.
ஓட்டளிப்பது உரிமை மட்டுமல்ல, கடமையுமாகும். டெல்லி, ராஜஸ்தான் மாநில தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதால், பயங்கரவாதத்திற்கும், தேர்தலுக்கும் சம்பந்தமில்லை என நினைப்பது, அக்கட்சியின் தவறான மனக்கோட்டை. அவ்வாறு நினைத்தால், அது பாஜகவுக்கு சாதகமாக அமையும்.
பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த காலங்களில் பீகார், ஒரிஸ்ஸா குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது, மத்திய பிரதேசத்தையும், சட்டீஸ்கரையும் இரண்டாவது முறையாக தக்க வைத்துள்ளது.
பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அத்வானியின் திறமைக்கு யாரும் நிகராக மாட்டார்கள். கட்சியின் எதிர்காலமும், வெற்றியும் அவர் தலைமையில் தான் இருக்கிறது.
தற்போதுள்ள சர்வதேச பொருளாதார நெருக்கடியால், ஐந்து லட்சம் பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகள் இல்லாத அளவு, தொழில் துறையில் எதிர்மறையான நிலையை நோக்கிப் போய்க் கொண்டுள்ளது.
உள்ளூர் பிரச்னைகளுக்கும், உள்ளூர் தலைவர்களுக்கும் தான் வரும் தேர்தலில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார் நாயுடு.
வாஜ்பாய் இல்லாததால் தோல்வி:
இந் நிலையில் ஹிமாச்சல் பிரதேச முன்னாள் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான சாந்தகுமார் நிருபர்களிடம் பேசுகையில்,
இந்திய அரசியலில் வாஜ்பாய் மிக முக்கிய இடம் பிடித்திருந்தார். தற்போதுள்ள பாஜக தலைமை, வாஜ்பாயை கலந்தாலோசித்தே செயல்பட்டாலும், அரசியலில் வாஜ்பாயின் நேரடி பங்களிப்பு இல்லாதது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றதெல்லாம், ஒரு பெரிய வெற்றி அல்ல. இருந்தாலும் அங்கு பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு வாஜ்பாயின் நேரடி பங்களிப்பு கட்சியிக்கு இல்லாததே முக்கிய காரணம் என்றார்.