For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் நேர்மை தான் என் கவசம்-வைகோ பெருமை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: என்னுடைய பெருமை, கவசம், பாதுகாப்பு எல்லாமே என்னுடைய நேர்மைதான் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

வடசென்னை மாவட்ட மதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது:

திருமங்கலம் தொகுதியின் மதிமுக எம்எல்ஏ வீர.இளவரசன் நவம்பர் மாதம் 8ம் தேதி அகால மரணமடைந்தார். நாடாளுமன்ற தேர்தலுடன், திருமங்கலம் இடைத்தேர்தல் வரும் என்று கருதினோம்.

ஆனால் டெல்லி, ராஜஸ்தான், மிசோரம் மாநிலங்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றியை தொடர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் திருமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதாக அறிவிப்பு வந்துள்ளது.

மங்களூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு தைரியம் இல்லை.

இலங்கை ராணுவ துணை தளபதி பொன்சேகா தமிழக அரசியல் தலைவர்கள் பற்றிய பேச்சுக்கு அவரோ அல்லது ராஜபக்சேவோ வருத்தம் தெரிவித்தார்களா? அப்படி இருக்கும் போது இலங்கை அரசு வருத்தம் தெரிவித்ததாக கூறுவது நியாயம்தானா?.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அப்படி இருந்தும் என்ன திமிர் பொன்சேகாவுக்கு. தமிழக முதல்வரை விமர்சித்தவனை எப்படி மன்னிக்க முடியும்?.

விடுதலைப் புலிகளிடம் இருந்து வைகோவுக்கும், பழ.நெடுமாறனுக்கும் வருமானம் போய்விடும் என்பதற்காக போரை நிறுத்த சொல்கிறார்கள் என்று கூறியிருக்கிறார் பொன்சேகா. பொதுவாழ்வு என்பது புனிதமான இடம். பக்தர்களுக்கு கோவில் சொத்து எப்படியோ, அது போலவேதான் கட்சி சொத்து.

பழ.நெடுமாறன் ஒரு துறவி போல வாழ்ந்து கொண்டிருக்கிறார். என்னுடைய பெருமை, கவசம், பாதுகாப்பு எல்லாமே என்னுடைய நேர்மைதான். சொந்த நாட்டிலே உரிமை கேட்டு போராடும் விடுதலைப் புலிகளிடம் இருந்து காசு வாங்குவது என்று கூறுவது ஈனத்தனத்தை விட கேவலமானது. போர் பூமியில் உயிரை பணயம் வைத்து செல்லும் அவர்களிடம் பணம் எதிர்பார்க்கிறோம் என்று சொல்பவர்களுக்கு மன்னிப்புகூட கிடைக்காது.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் எண்ணம் தற்போது தமிழ்நாட்டை நோக்கி உள்ளது. இலங்கை தமிழர்கள் தொப்புள்கொடி உறவுகளாம், தாய்த் தமிழ்நாட்டு தமிழர்களை நம்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு யார் கதி? நாம்தானே. நம் சொந்த சகோதரர்கள் சாகிறார்களே, சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ துடிப்பது தவறா? சுதந்திர தமிழ் ஈழத்தை நாம் ஆதரிக்க வேண்டும். ஈழத் தமிழர்களை காக்கும் உணர்வு தமிழ்நாட்டில் பரவட்டும் என்றார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X