இடைத்தேர்தல்: திமுகவுக்கு காங். வைக்கும் டெஸ்ட்-விஜயகாந்த்
மதுரை: திமுகவின் செல்வாக்கை அறிவதற்கு காங்கிரஸ் வைக்கும் சோதனையாகக் கூட திருமங்கலம் இடைத் தேர்தல் இருக்கலாம் என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறியுள்ளார்.
மதுரை மேலஆவணி மூல வீதியில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
திருமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தல் மிக அவசரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேவையே இல்லை. கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்த பின்னர் 5 நாட்கள் சட்டமன்ற கூட்டமும் நடந்தது. ஆனால் மங்களூர் தொகுதி எம்எல்ஏவின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக சபாநாயகர் அறிவிக்கவில்லை.
இந் நிலையில் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலை போல் மங்களூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இந்த இடைத்தேர்தலில் திமுகவின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்று காங்கிரஸ் சோதிக்க விரும்புகிறதோ என்ற சந்தேகமும் எங்களுக்கு எழுந்துள்ளது என்றார்.