'ஸ்பெக்ட்ரம்': ராஜ்யசபாவில் திமுக-அதிமுக மோதல்
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் ராஜ்யசபாவில் திமுக-அதிமுக எம்பிக்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
அதிமுக ராஜ்யசபா தலைவர் மைத்ரேயன், இந்தப் பிரச்சனையைக் கிளப்பி தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரினார்.
மைத்ரேயன் பேசுகையில், இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய ஊழலாக ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்துள்ளது. உலகளாவிய ஏலத்துக்கு பதிலாக முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 2-ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொலை தொடர்பு துறையில் அனுபவமே இல்லாத சந்தேகத்துக்கிடமான நிறுவனங்கள் கூட உரிமம் பெற்றுள்ளன. யூனிடெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்குக் கூட தொலைத் தொடர்பு லைசென்ஸ் விற்கப்பட்டுள்ளது. இந்த ஊழல் மூலமாக மத்திய அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு காரணமான அமைச்சர் பதவி விலக வேண்டும், இல்லாவிட்டால் அவரை நீக்கிவிட்டு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை நடத்த வேண்டும் என்றார். இதையே அதிமுக எம்பிக்கள் வலியுறுத்தி குரல் தந்தனர்.
கனிமொழி கடும் எதிர்ப்பு:
இதற்கு கனிமொழி தலைமையில் திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அதிமுக மற்றும் திமுக எம்பிக்களிடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
அதிமுகவுக்கு பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பிக்கள் ஆதரவு தெரிவித்து குரல் தந்தனர். இதையடுத்து திமுகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
இந்த விவாதம் தவிர, தமிழக மின் வெட்டு குறித்தும் ராஜ்யசபாவில் அதிமுக பிரச்சனை கிளப்பியது. அதிமுக எம்பி மலைச்சாமி பேசுகையில், தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவில் கடுமையான மின்வெட்டை தமிழக அரசு அமல்படுத்தி இருக்கிறது. மின்சார உற்பத்திக்காக குறுகிய அல்லது நீண்டகால திட்டம் எதுவும் அரசிடம் உள்ளதா என்றார்.
இதற்கு திமுக எம்பிக்கள் தரப்பில் கடும் ஆட்சேபம் எழுந்தது. திமுக எம்பிக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.க்களும் குரல் கொடுத்தனர்.
காங்கிரஸ் எம்பி ஜெயந்தி நடராஜன் பேசுகையில், ஒரு மாநில பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எப்படி எழுப்பலாம்?, மின்வெட்டு பிரச்சினையை தமிழக சட்டசபையில்தான் பேச வேண்டும் என்றார்.