பதக்கங்களுடன் திரும்பிய பாக்சர்கள்-வரவேற்க வராத சங்கம்
டெல்லி: உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் நான்கு வெண்கலப் பதக்கங்களைப் பெற்று தாயகம் திரும்பிய இந்திய குத்துச்சண்டை வீரர்களை வரவேற்க இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்திலிருந்து ஒருவர் கூட வரவில்லை. அதை விட கொடுமையாக நான்கு வீரர்களும் டாக்சியைப் பிடித்து வீடு போய்ச் சேர்ந்ததுதான்.
இந்திய குத்துச்சண்டை அணி மாஸ்கோவில் நடந்த உலக குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்றது. இதில் நான்கு வெண்கலப் பதக்கங்கள் இந்தியாவுக்குக் கிடைத்தது.
பதக்கங்களுடன் நேற்று டெல்லி திரும்பியது இந்திய அணி. தங்களுக்கு ஏதாவது வரவேற்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் வந்த குத்துச்சண்டை அணிக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சிதான். காரணம், குத்துச்சண்டை சம்மேளனத்திலிருந்து ஒருவர் கூட வராததுதான்.
இதையடுத்து அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு வெளியே வந்த வீரர்களும், அணியினரும், டாக்சிகளைப் பிடித்து வெளியேறினர்.
வீரர்களுக்கும், அணியினருக்கும் கிடைத்த ஒரே ஆறுதல் அங்கு திரண்ட ரசிகர்களும், பத்திரிக்கையாளர்களும்தான். அவர்களிடம் தாங்கள் வாங்கிய பதக்கங்களைக் காட்டி விட்டு கிளம்பிச் சென்றனர் குத்துச்சண்டை வீர்ரகள்.
கடந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின்போது இந்திய குத்துச் சண்டை அணிக்கு ஒரு பதக்கம் கிடைத்தது. கடந்த பல ஆண்டுகளுக்குப் பின்னர் பதக்கம் பெற்று சாதனை படைத்த இந்திய குத்துச்சண்டை அணிக்கு சிறப்புப் பரிசுகள் தரப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஒரு பரிசு கூட வந்து சேரவில்லை என்பது போனஸ் துயரம்.