பயணிகளை 'பாடாய் படுத்தும்' ரயில்வே!
சமீபத்தில் பயணிகள், கூட்ட நெரிசலில் காத்து நிற்பதை தவிர்க்க தெற்கு ரயில்வே அனைத்து ரயில் நிலையங்களிலும் மின்சார ரயில் டிக்கெட் மற்றும் முன்பதிவு செய்யப்படாத சாதாரண டிக்கெட் வழங்கப்படும் என அறிவித்தது.
இதனால் சென்னையில் உள்ள எல்லா ரயில் நிலையங்களிலும் பயணிகள் சிரமம் இல்லாமல் எளிதாக டிக்கெட் பெற முடியும் என ரயில்வே நிர்வாகம் கருதியது.
ஆனால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பயணிகள் கூட்டத்தை குறைப்பதற்காக அறிவிக்கப்பட்ட இந்த புதிய திட்டம் நேர் எதிர் விளைவை ஏற்படுத்தி வருகிறது.
மின்சார ரயில் பயணிகளும், எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளும் ஒரே கவுண்டரில் நிற்பதால் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மின்சார ரெயில் பயணிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். சீசன் டிக்கெட் இல்லாதவர்கள் வரிசையில் நின்று தான் டிக்கெட் பெறவேண்டும். அப்படி நிற்கும் போது வெளியூர் பயணிகளும் அதே வரிசையில் முன் பதிவு இல்லாத டிக்கெட் வாங்குவதற்கு நிற்கிறார்கள்.
சரியான டிக்கெட் கட்டணம் தராததாலும், மீதி சில்லறை பெறுவதிலும் ஏற்படும் தாமதத்தால் மின்சார ரயில் பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள். மின்சார ரயில் பயணிகளின் டிக்கெட் கட்டணம் ரூ. 4,5,10,12 என மிகசிறிய தொகையாக இருப்பதால் வழக்கமாக செல்பவர்கள் சரியான தொகையை கொடுத்து விட்டு வேகமாக டிக்கெட்டை பெற்று ஸயிலை பிடிக்க ஓடுவார்கள்.
ஆனால் எல்லா ஸயில் நிலைய கவுண்டர்களிலும் மின்சார, எக்ஸ்பிரஸ் ஸயில் டிக்கெட் கொடுப்பதால் மின்சார ரயில் பயணிகளுக்கு பெரும் பிரச்சினையாகியுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு கருதி முன்பதிவு இல்லாத டிக்கெட் கவுண்டர்கள் மூடப்பட்டன. அதற்கு பதிலாக மூர் மார்க்கெட் பில்டிங்கில் 6 கவுண்டர்கள் திறக்கப்பட்டு செயல்படுகிறது.
புறநகர் ரயில் பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கப்பட்ட 1 முதல் 4 கவுண்டர்களிலும் தற்போது எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு டிக்கெட் கொடுப்பதால் புறநகர் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டியது உள்ளது.
எனவே சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் போன்ற பெரிய ரெயில் நிலையங்களிலாவது தனித்தனி கவுண்டரில் மின்சார, எக்ஸ்பிரஸ் டிக் கெட்டுகள் வழங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ரயில்வே நிர்வாகம் என்ன செய்யப் போகிறது?