பொருளாதார நெருக்கடி: சிக்கனத்துக்கு மாறும் பிரிட்டிஷ் ராஜ குடும்பம்
உலகப் பொருளாதாரம் தகித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்து ராணி எலிசபெத், அரண்மனையில் சிக்கண நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார்.
ஆடம்பர செலவுகளைக் குறைக்க வேண்டும் என அரச குடும்பத்தினருக்கு அவர் உத்தரவு போட்டுள்ளாராம்.
கிறிஸ்துமஸ் விருந்தின்போது சாப்பாடு மீதமானால் அதை தூக்கி வீசாமல் இல்லாதவர்களுக்குக் கொடுக்குமாறும், முடிந்தால் நீங்களே சாப்பிடுங்கள் என்றும் சமையல்காரர்களுக்கு உத்தரவு போட்டுள்ளாராம்.
மேலும், தனது பேரன்கள் வில்லியம், ஹாரி ஆகியோரிடம், கிறிஸ்துமஸ் விடுமுறையை ஆடம்பரம் இல்லாமல் அமைதியாக கொண்டாடுமாறும் உத்தரவிட்டுள்ளாராம்.
மேலும் கிறிஸ்துமஸுக்காக வாங்கவுள்ள பட்டாசுகளுக்கும் கிடுக்கிப்பிடி போட்டுள்ளாராம் ராணி.
அதிக பணத்தை பட்டாசுகளுக்காக செலவழிக்கக் கூடாது என்பது அரச குடும்பத்தினருக்கு அவர் போட்டுள்ள உத்தரவு.
அரச குடும்பத்தினரின் கொண்டாட்டங்களுக்காக கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாசு தயாரித்து கொடுக்கும் நிறுவனமான டாம் ஸ்மித்திடம், விலை மலிவான பட்டாசுகளைத் தயாரித்துக் கொடுக்குமாறு அரண்மனையிலிருந்து உத்தரவு போயுள்ளதாம்.
இங்கிலாந்தும், பிற உலக நாடுகளும் பொருளாதார சிக்கலில் இருக்கும்போது அரச குடும்பத்தினர் மட்டும் ஆடம்பரமாக இருப்பதை மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்று கருதுகிறாராம் ராணி. அதனால்தான் இந்த கிடுக்கிப்பிடி உத்தரவுகள்.
இதுதவிர அரச குடும்பத்தினர் கலந்து கொள்ளும் பார்ட்டிகளில், 50 பவுன்டுக்கு மேல் கிப்ட் பொருட்களை வாங்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார் ராணி எலிசபெத்.
கிப்ட் பொருட்களை வைத்துக் கொடுக்கும் அட்டைப் பெட்டிகளை அப்படியே தூக்கி எறியாமல் தேவைப்படுபவற்றுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறும் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
ராணியின் இந்த உத்தரவுகள் இங்கிலாந்து மக்களிடையே இருவிதமான கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. ராணி இப்படி உத்தரவு போட்டாலும், அரச குடும்பத்தினரின் இளைய வாரிசுகள் இன்னும் ஆடம்பரமாகத்தான் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். பார்ட்டிகளில் தடபுடலான ஏற்பாடுளை களை கட்டுகின்றன என்று சிலர் முனுமுனுக்கின்றனர்.
82 வயதாகும் ராணி எலிசபெத்தின் சொத்து மதிப்பு 475 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்துமஸுக்காக ராணியின் நார்போல்க் எஸ்டேட் அரண்மனையில் அரச குடும்பத்தினர் கூடி கொண்டாடவுள்ளனர்.