அஸார் காவலில் இல்லை - பாகிஸ்தானிலேயே இல்லை: தூதர்
சமீபத்தில்தான் மசூத் அஸார் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் செளத்ரி முக்தார் அகமது கூறியிருந்தார். அதை மறுக்கும் விதமாக தற்போது இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் ஷாஹித் மாலிக் இப்படிக் கூறியுள்ளார்.
மேலும் மசூத் அஸார் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை என்றும் அவர் எங்கு போனார் என்ற விவரமும் தங்களிடம் இல்லை எனவும் அவர் மேலும் குழப்பியுள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நாங்களும் அஸாரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம். எனக்குத் தெரிந்தவரை, அஸார் வீட்டுக் காவலில் இல்லை. அவர் பாகிஸ்தானிலேயே இல்லை. எங்கு இருக்கிறார் என்றும் எங்களுக்குத் தெரியாது.
அதேபோல இந்தியா கோரி வரும் தாவூத் இப்ராகிமும் பாகிஸ்தானில் இல்லை. தாவூத் பாகிஸ்தானில்தான் இருக்கிறான் என்று இந்தியா கூறினாலும் கூட அதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. உண்மையில் தாவூத் இங்கு இல்லை.
ஐ.எஸ்.ஐக்கும், லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றார் மாலிக்.
அஸார் வீட்டுக் காவலில் இருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் கூறியிருந்த நிலையில், அவர் பாகிஸ்தானிலேயே இல்லை என்று பாகிஸ்தான் தூதர் கூறியிருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.