சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எந்திரன் - கலாநிதி மாறனுடன் ரஜினி சந்திப்பு
சென்னை: சன் பிக்சர்ஸ் நிறுவனம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் எந்திரன் படத்தைத் தயாரிக்கவுள்ளது. இதுதொடர்பாக சன் குழும நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறனை அவரது இல்லத்திற்குச் சென்று ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், கேமராமேன் ரத்னவேலு உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிப்பில் இருந்து வரும் படம் எந்திரன். இப்படத்தை தற்போது சன் டிவி குழுமத்தின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதி பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது.
இதுகுறித்து சன் பிக்சர்ஸ் தலைமை செயலதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கூறுகையில், இந்தியாவின் மிகப் பெரிய மீடியா நெட்வொர்க் குழுமத்தின் ஒரு அங்கம்தான் சன் பிக்சர்ஸ். பெரும் பொருட்செலவில் உருவாகும் எந்திரன் படத்தை ஷங்கர் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
பிரமாண்டம், புதுமை, உருவாகும் விதம், நட்சத்திரங்கள் என அனைத்து வகையிலும் இந்தப் படம் மிகப் பெரிய படமாக உருவாகும். அடுத்த ஆண்டு இறுதியில், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியாகும்.
வெற்றிப் படங்களை வெளியிட்டு வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான எந்திரனில் ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் பணியாற்றவுள்ளனர். கிராபிக்ஸ் காட்சிகள், ஸ்பெஷல் எபக்ட்ஸ்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் இதுவரை இந்தியத் திரையுலகம் பார்த்திராத வகையில் புதுமையாக உருவாக்கப்படுகிறது என்றார் சக்ஸேனா.
எந்திரன் படம் குறித்து கலாநிதி மாறன் கூறுகையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இது மிகப் பெரிய படம். இந்தப் படம் இந்தியாவிலேயே மாபெரும் படமாக அமையும் உணர்வுப்பூர்வமாக நம்புகிறேன்.
ரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைவதில் மிகவும் பெருமைப்படுகிறேன். சர்வதேச அளவில் மிகப் பெரிய உயரத்தை எந்திரன் படம் தொடும் என்றார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறுகையில், இது இந்தியாவின் மிகப் பெரும் படம். கலாநிதி மாறனுடன் பணியாற்றுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். படம் சிறப்பாக வரும் என்றார்.
ஷங்கர் கூறுகையில், கலாநிதி மாறன் மற்றும் சன் பிக்சர்ஸ் உடன் இணைவதில் பெருமைப்படுகிறேன். ரஜினிகாந்த்துடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்தப் படம் சன் டிவியுடன் சேரும்போது பலத்த எதிர்பார்ப்புடன், விளம்பர வெளிச்சமும் உச்சபட்சமாகும் என்றார்.