கிளாஸ்கோ தீவிரவாத தாக்குதல் - ஈராக் டாக்டருக்கு ஆயுள் தண்டனை
லண்டன்: கிளாஸ்கோ விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் கைதான ஈராக் டாக்டர் பிலால் அப்துல்லாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிலால் அப்துல்லாவும், இந்திய டாக்டரான கபீல் அகமதவும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிளாஸ்கோ விமான நிலையம் மீது வெடிகுண்டுகளை நிரப்பிய காருடன் சென்று தாக்குதல் நடத்தினர்.
இதில் கபீல் அகமது படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமடைந்தார்.
அவருடன் கைதான பிலால் அப்துல்லா மீது உல்விச் கிரவுன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கில் பிலால் அப்துல்லாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி காலின் மாக்கே தீர்ப்பளித்தார்.
பிலால் அகமது மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுக்களிலும் குறைந்தது தலா 32 ஆண்டு சிறைத் தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
பிலால் அகமது மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபனமாகியுள்ளதாகவும், அவர் மிகவும் அபாயகரமான மனிதர் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஜோர்டான் நாட்டு டாக்டர் முகம்மது அஸா, விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் அவரை ஜோர்டானுக்கே நாடு கடத்துமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.