டி சீரிஸில் 230 ஊழியர் நீக்கம்
டெல்லி: பிரபல இந்தி ஆடியோ மற்றும் படத்தயாரிப்பு நிறுவனமான டி சீரிஸ் தனது 230 பணியாளர்களை நீக்கியுள்ளது.
இந்தியாவில் ஆடியோ மற்றும் படத் தயாரிப்புத் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனம் டி சீரிஸ். இந்த நிறுவனத்தின் பிரதான தொழிற்சாலை மற்றும் அலுவலகம் டெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ளது. மொத்தம் 800 நிரந்தர பணியாளர்களும், 500 ஒப்பந்த பணியாளர்களும் இந்த நிறுவனத்தில் உள்ளனர்.
இவர்களில் 230 பேரை முன்னறிவிப்பு இல்லாமல் நீக்கிவிட்டதாம் டி சீரிஸ்.
நேற்று காலை இந்தப் பணியாளர்கள் நொய்டா அலுவலகத்துக்குள் நுழைந்த போது, உள்ளே நுழையக் கூடாது என வாயிலுக்கு வெளியே காவலர்கள் நிறுத்திவிட்டார்களாம்.
இதனை எதிர்த்து நேற்று முழுவதும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களும், யூனியன் தலைவர்களும் நொய்டாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், பணியாளர்கதளை நீக்கியுள்ளனர். அதையும் கூட கவுரமாகச் செய்யவில்லை. வாட்ச்மேனை விட்டு துரத்தியடித்துள்ளனர். இதனை கண்டிக்கிறோம். எங்களுக்கு நடந்துள்ளது மிகப் பெரிய துரோகம் என்று செய்தியாளர்களிடம் கூறினர் யூனியன் தலைவர்கள்.