ஒரிஸ்ஸா: கிருஸ்துமஸ் அன்று விஎச்பி-பஜ்ரங் தள் பந்த்
மதமாற்றத்தைத தடுத்து வந்த சுவாமி லட்சுமானந்தாவை நக்ஸல்கள் சுட்டுக் கொன்றதையடுத்து அந்த மாநிலத்தில் கிருஸ்துவர்கள் மீது இந்துத்துவா அமைப்புகள் வெறித் தாக்குதல் நடத்தின.
இதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிருஸ்துவ தேவாலயங்கள் உடைக்கப்பட்டன. காந்தமாலில் கிருஸ்துவ அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் மீது பாலியல் அத்துமீறல்களும் நடந்தன. இதை போலீசார் கை கட்டி வேடிக்கை பார்த்தனர்.
இந் நிலையில் லட்சுமனந்தாவைக் கொன்றவர்களை கைது செய்ய மாநில அரசு தவறிவிட்டதாகக் கூறி இந்துத்துவா அமைப்புகள் வரும் 25ம் தேதியன்று, கிருஸ்துமஸ் தினத்தில், பந்த் நடந்த அழைப்பு விடுத்துள்ளன.
இத்தனைக்கும் அங்கு பாஜக-பிஜூ ஜனதா தள கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது. இந்த பந்துக்கு அனுமதி தரப்படாது என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தாலும் கிருஸ்துவ மக்களிடையே பீதி பரவியுள்ளது.
கிருஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் காந்தமால் பகுதிக்குள் ஒரிஸ்ஸாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் நுழைந்துள்ளதாகவும், அவர்கள் ஆயுதங்களுடன் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகவும், கிருஸ்துமஸ் தினத்தன்று பெரும் வன்முறையில் ஈடுபட முயல்வதாகவும் புவனேஸ்வர்-கட்டக் பகுதியின் ஆர்ச் பிஷப் ரபேல் சீனாத் கூறியுள்ளார்.
பந்த் நடத்த தங்களுக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்று கூறியுள்ள விஎச்பியின் மாநிலத் தலைவர் பிரசாத் ரத், திட்டமிட்டபடி மாநில அளவில் பந்த் நடக்கும் என்று அறிவித்துள்ளார்.
இந்த பந்துக்கு ஒரிஸ்ஸா பாஜக எம்எல்ஏவான பரத் பைக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் பாஜக தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என அக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதக் கலவரத்துக்கு சதி-சிபிஎம்:
இந்த பந்த் மூலம் கிருஸ்துமஸ் தினத்தன்று கிருஸ்துவ மக்கள் மீது தாக்குதல் நடத்த இந்துத்துவா அமைப்புகள் சதி செய்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
அக் கட்சியின் எம்பியான ஹன்னான் மூலா இன்று மக்களவையில் பேசுகையில்,
பந்த் என்ற பெயரில் மதக் கலவரத்துக்கு விஎச்பி-பஜ்ரங் தள் ஆகியவை சதித் திட்டம் தீட்டியுள்ளன. இவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மாநிலத்தில் உள்ள பாஜக-பிஜூ ஜனதா தள ஆட்சிக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் பொறுப்புண்டு என்றார்.