ஒற்றுமையின்மையால் சட்டீஸ்கர், ம.பியில் தோல்வி-சோனியா
டெல்லி: காங்கிரஸ் கட்சியினரிடையே நிலவிய ஒற்றுமையின்மையால்தான் மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கரில் கட்சிக்கு தோல்வி கிடைத்தது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில் கலந்து கொண்டு சோனியா பேசுகையில், நமக்குள் நிலவிய ஒற்றுமையின்மையால்தான் இரு மாநிலங்களிலும் தோற்றோம். தோல்வியிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
நமது தோல்விக்கு இதுபோல சில காரணங்கள் உள்ளன. முக்கியமான காரணம் நமக்குள் ஒற்றுமை இல்லாததே. இதுதான் இரு மாநிலங்களிலும் நம்மைத் தோற்கடித்து விட்டது.
தலைவர்கள் தங்களுக்குள் நிலவும் பூசல்களை தேர்தல் சமயத்திலாவது களைய முன்வர வேண்டும்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலை அரசியலாக்குகிறது பாஜக. காங்கிரஸ் கட்சிக்கு தீவிரவாதத்தால் அனைத்து மாநிலங்களிலும் தோல்வி கிடைக்கும் என அது தப்புக்கணக்கு போட்டு விட்டது.
ஆக்கப்பூர்வமாக செயல்படாமல் மும்பை சம்பவத்தை அரசியலாக்கியதால்தான் அது தோல்வியுற்றது.
பாஜகவின் விஷமப் பிரசாரத்தை டெல்லிமக்கள் நிராகரித்து விட்டனர் என்றார் சோனியா.