புலிகளின் நிவில் முகாமைப் பிடித்தது ராணுவம்
கொழும்பு: மேற்கு கிளிநொச்சியை ஒட்டியுள்ள நிவில் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முகாமை ராணுவம் பிடித்துள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியைப் பிடிக்க ராணுவம் கடும் பிரயத்தனம் செய்து வருகிறது. ஆனால் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு அரண்களைத் தாண்டி முன்னேற முடியாமல் ராணுவம் சிக்கித் திணறி வருகிறது.
விடுதலைப் புலிகள் கிளிநொச்சியைச் சுற்றிலும் வலுவான முறையில் பாதுகாப்பு அரண்களை அமைத்துள்ளதால் அதை முறியடிக்க முடியாமல் திணறுகிறது ராணுவம். கிளிநொச்சிக்குள் ஊடுறுவ முடியாத வகையில் புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தி வருவதால் ராணுவத்தினருக்கு பல வழிகளிலும் பேரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
கிளிநொச்சியை முத்தமிடும் தூரத்தில் இருப்பதாக கடந்த 2 மாதங்களாக கூறிக் கொண்டிருக்கிறது ராணுவம். ஆனால் இன்னும் உள்ளே புக முடியாத அளவுக்கு விடுதலைப் புலிகள் கடும் தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 200 ராணுவத்தினர் வரை உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக கிளிநொச்சியைச் சுற்றிலும் உள்ள பகுதிகளைப் பிடிக்கும் முயற்சியில் ராணுவம் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் அடம்பன், நிவில் பகுதிகளில் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வந்தது.
இதில், 582வது படைப் பிரிவு, நிவில் பகுதியில் உள்ள புலிகளின் முகாம் ஒன்றைப் பிடித்துள்ளது.
மேற்கு இரணமடு, தெற்கு அடம்பன் ஆகிய பகுதிகளில் கடும் சண்டை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவில் பகுதியில் உள்ள முகாமைத்தான் விடுதலைபுலிகள் தங்கள் தடுப்பு அரணாக பயன்படுத்தி வந்தனர்.
இந்த தடுப்பு அரணை பிடித்து விட்டதாகவும், இங்குள்ள பதுங்கு குழிகள், ஆயுத கிடங்குகளை அழிக்கப்பட்டதாகவும் ராணுவம் அறிவித்துள்ளது.
ஆனால் மற்ற பகுதிகள் அனைத்திலும் விடுதலைபுலிகள் வலுவான நிலையிலேயே உள்ளனர். கிளிநொச்சியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ராணுவம் தொடர்ந்து முன்னேற முடியாமல் உள்ளது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், கிளிநொச்சியை பிடிக்க காலக்கெடு எதுவும் ராணுவத்துக்கு விதிக்கவில்லை.
இப்போது பின்னடைவு ஏற்பட்டாலும் விரைவில் கிளிநொச்சியை பிடித்தே தீருவோம் இப்போது தென் பகுதி வழியாக நுழைய முயற்சித்து வருகிறோம்.
விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட இழப்பை விட எங்களுக்கு ஏற்பட்ட இழப்பு குறைவுதான் என்று தெரிவித்துள்ளார்.