சென்னை அதிரடிப்படைக்கு என்.எஸ்.ஜி. கமாண்டோ பயிற்சி
சென்னை: சென்னை சிறப்பு அதிரடிப்படையை புதுப் பொலிவுடன் மாற்றியமைக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. படையின் பெயர் மாற்றப்படுவதோட இந்த அதிரடிப்படையினருக்கு, என்.எஸ்.ஜி. கமாண்டோ படையின் பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது.
மும்பைத் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலமும் தத்தமது காவல்படைகளின் பலத்தையும், அவற்றின் செயல் திறனையும் மறு பரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளன.
மகாராஷ்டிர அரசு, போர்ஸ்-1 என்ற பெயரில் புதிய கமாண்டோப் படையை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளது. அந்தப் படையினருக்கு அதி நவீன துப்பாக்கிகளும் வழங்கப்படவுள்ளன.
இந்தநிலையில் சென்னை சிறப்பு அதிரடிப்படையையும் புதுப் பொலிவுடன் மாற்றியமைக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. இந்தப் படைக்கு புதிய பெயர் சூட்டவும், என்.எஸ்.ஜி. கமாண்டோ பயிற்சியை அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தவிர அதி நவீன துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் இந்த அதிரடிப்படைக்கு தரப்படவுள்ளது.
இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறுகையி்ல், அதிரடிப்படையை மாற்றி அமைப்பது தொடர்பான நடவடிக்கைகள் வேகமாக நடந்து வருகின்றன. அவர்களுக்கு புதிய நவீன ஆயுதங்களை வழங்கவுள்ளோம். மேலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும் அதிகரிக்கவுள்ளோம் என்றார்.
இதுதவிர அதிரடிப்படைக்கு புதிய பெயர் ஒன்றும் சூட்டப்படவுள்ளதாம்.
காவல்படைகளை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் குறித்த திட்டங்களை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு சமீபத்தில் மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தின்போது தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரடிப்படை புதுப் பொலிவு பெற்றாலும் கூட, கூடுதலாக வீரர்களை நியமிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லையாம். தற்போதைய அளவிலேயே இந்த அதிரடிப்படை தொடர்ந்து செயல்படும். சென்னை காவல்துறையின் ஆயுதப் பிரிவின் கீழேயே இது செயல்படும். அதில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது.
தமிழ்நாடு கமாண்டோப் படையுடன் இணைந்து இந்த சிறப்பு அதிரடிப்படையினர் செயல்படுவர். தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்தால் அவற்றை சமாளிக்கக் கூடிய திறமை இவர்களுக்கு உண்டு என்று கால்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல, சென்னை நகர வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு மற்றும் அகற்றும் பிரிவையும் புதுப்பொலிவுடன் மாற்றியமைக்கவுள்ளனர். சென்னையில் தற்போது இந்தப் படையில் ஐந்து குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் நான்கு நிபுணர்கள் உள்ளனர். இவர்களுக்கு என்.எஸ்.ஜி. படையிடமிருந்து சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. மேலும், அதி நவீன கருவிகளும் வழங்கப்படவுள்ளன.
வெடிகுண்டுகளை அகற்றும் குழுவினருக்கு தற்போது தமிழ்நாடு கமாண்டோப் படைதான் பயிற்சி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.