வேலை நீக்கமா... வோலை வாய்ப்பா...: குழப்பும் ரிலையன்ஸ் குழுமம்!
அதே நேரம் புதிதாக 90,000 பேரை தற்காலிகமாக வேலைக்கு எடுப்பதாக இன்று அறிவித்துள்ளது அனில் அம்பானி வசமுள்ள அனில் திருபாய் அம்பானி குழுமம்.
இன்று வெளியாகியுள்ள அறிக்கையில், 'அனில் திருபாய் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனம் 2,500 மேலாளர்கள் உள்பட 90,000 பேரை புதிதாக தனது இன்ஸூரன்ஸ் பிரிவுக்கு அமர்த்துகிறது. இவர்கள் அனைவரும் தற்காலிகமாக ஒப்பந்த முறையில் அமர்த்தப்படுகிறார்கள்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனில் திருபாய் அம்பானி நிறுவன செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கூறியதாவது:
90,000ம் புதிய வேலை வாய்ப்புகளை எங்கள் நிறுவனத்தின் இன்ஸூரன்ஸ் பிரிவு உருவாக்குகிறது. இவர்களில் 80,000 பேருக்கு மேல் ஏஜென்டுகள் மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள்தான்.
இன்ஸூரன்சுக்கு மட்டும் 2,500 விற்பனை மேலாளர்களையும் நியமிக்கவிருக்கிறோம்.
சர்வதேச பொருளாதாரம் மந்த நிலையில் உறைந்துவிட்டிருந்தாலும், எங்கள் நிறுவனத்தின் கம்யூனிகேஷன்ஸ் பிரிவு எந்த பாதிப்பும் இல்லாமல்தான் செயல்பட்டு வருகிறது. சொல்லப் போனால் ரிலையன்ஸ் எனர்ஜி மற்றும் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனங்களில் இன்னும் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுத்துக் கொண்டுதான் உள்ளோம் என்றார்.
இன்னொரு பக்கம் அனில் அம்பானி குழுமத்தில் ஏற்கெனவே கணிசமான ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்ஸூரன்ஸ் பிரிவில் 6,000 இடைநிலை நிர்வாகிகள் மற்றும் முழு நேர ஊழியர்களை நீக்கியுள்ளதாக சிஎன்பிசி தெரிவித்துள்ளது. ஆனால் இதை மறுத்துள்ள அனில் அம்பானி குரூப், அதே இன்ஸூரன்ஸ் பிரிவுக்குதான் இப்போது 90,000 பேரை எடுப்பதாக அறிவித்துள்ளது.
சிக்கன நடவடிக்கையில் முகேஷ்:
முகேஷ் அம்பானியோ, தனது வசம் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தில் சிக்கன நடவடிக்கையை அமல்படுத்துவதில் மும்முரமாக உள்ளார். அடுத்த இரு காலாண்டுகளில் முகேஷ் அம்பானி 8 முதல் 10 சதவீத ஊழியர்களைக் குறைப்பதில் தீவிரம் காட்டத் துவங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.
முதல்கட்டமாக 3,500 முதல் 4,500 வரை பணியாளர்கள் நீக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், சிக்கன நடவடிக்கை இன்றைக்கு மிகவும் அவசியமாக உள்ளது. சூழலுக்கு தக்கவாறு முடிவெடுப்பதுதானே சிறந்த நிர்வாகம். அதன்படிதான் ரிலையன்ஸ் செயல்படுகிறது என்றார்.
ஏற்கெனவே ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான உழியர்களை, ஒப்பந்த்தாரர்களை ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகப் பிரிவில் நீக்கிவிட்டதாகத் தெரிகிறது. ஆனால் இதை ஒரே நேரத்தில் செய்யாமல், வெளியில் தெரியாத வகையில் சாமர்த்தியமாகச் செய்துள்ளனர்.
வெளிப்படையாகச் செய்தால் நிறுவனத்தின் இமேஜ் பாதிக்கும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையின்மையைச் சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பதால் இந்த கமுக்கமான நீக்கங்கள் என்கிறார்கள்.
ரிலையன்ஸின் ஜாம் நகர் எண்ணெய் சுத்திகரிப்புப் பிரிவிலும் கணிசமான ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.