காங்.-பெரியார் திகவினர் மோதல்- இரு தரப்பினரும் கைது
இந்த சம்பவத்தைத் தடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்த்ததாகக் கூறி தடையை மீறி கோட்டையை நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட சுமார் 200 காங்கிரஸ் கட்சியினரும் கைது செய்யப்பட்டனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்தும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொச்சைப்படுத்தியும் பேசியதாக இயக்குனர் சீமான், பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதைக் கண்டித்து இன்று காலை ஆனூர் ஜெகதீசன் தலைமையில் பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த 100 பேர் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் அருகே ராயப்பேட்டை மணிக்கூண்டு எதிரே கூடினர்.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோரின் உருவப் பொம்மைகளை அவர்கள் எரித்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து அங்கு வந்த காங்கிரசாருக்கும் பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பெரும் வாக்குவாதம் மூண்டது.
இரு தரப்பினரும் அடிதடியில் இறங்கும் சூழல் ஏற்பட்டதை.டுத்து பெரியார் திராவிடக் கழகத்தைச் சேர்ந்த 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில் போலீசார் கண் எதிரிலேயே உருவப் பொம்மைகளைகள் எரிக்கப்பட்டதாகவும், அதை அவர்கள் வேடிக்கை பார்த்ததாகவும் கூறி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் தலைமையி்ல் 200 காங்கிரஸ் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
மறியலை தொடர்ந்து காங்கிரசார் கோட்டையை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கலைந்து செல்லுமாறு கூறினர்.
அதை அவர்கள் கேட்க மறுத்து ஊர்வலம் செல்ல முயன்றதையடுத்து 200 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களை காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லாமல் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்துக்கு கொண்டு சென்றனர்.
சத்தியமூர்த்தி பவன் மீது கல்வீச்சு:
இந் நிலையில் பிற்பகலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படும் சிலர் சத்தியமூர்த்தி பவன் மீது கல் வீ்ச்சுத் தாக்கிதலில் ஈடுபட்டனர்.
மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த சோனியா காந்தியின் பேனரையும் அவர்கள் கிழித்ததாகத் தெரிகிறது. இந்த தாக்குதலை நடத்திவிட்டு அவர்கள் தப்பியோடிவிட்டனர்.
அவர்கள் யார் என்று சரியாகத் தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.