காவல் நிலையங்களை பூட்டிவிட்டு போலீசார் திடீர் ஸ்டிரைக்
புதுச்சேரி சாரம்- சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் பாஸ்போர்ட்டு வாங்கித் தருவதாக ஒரு பெண்ணிடம் நகை, பணத்தைப் பெற்றுள்ளார்.அது தொடர்பாக அந்த பெண் போலிஸில் புகார் செய்தார். ரமேஷ் மீது வழக்குப் பதியாமல் இருக்க உருளையன்பேட்டை போலிஸ் எஸ்.ஐ. ஸ்ரீதர் ரூ. 5,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
எஸ்.ஐக்கு ஏஜண்டாக அம்பலவாணன் என்ற வக்கீல் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர்களை சி.பி.ஐ.அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு கையும் களவுமாக பிடித்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை காலை நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். வக்கீல் அம்பலவாணனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. எஸ்.ஐ ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
இதனால் கோபமடைந்த காவல் துறையினர் கோர்ட்டு வளாகத்தில் திரண்டனர். நீதிபதிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். போக்குவரத்துப்பிரிவு, எல்லைக்காவல் என அனைத்து காவலர்களும் குடும்பத்துடன் திரண்டுவிட்டனர். அருகில் இருந்த காவல் நிலையங்கள் சிலவற்றைப் பூட்டிவிட்டு காவலர்கள் வந்துவிட்டனர்.
வயர்லஸ், செல்போன் கருவிகளால் காவலர்கள் செய்திகளைப் பரிமாறிக் கொண்டு கோர்ட்டு வளாகத்திற்கு வந்துவிட்டனர். செய்தி சேகரிக்க சென்ற கேமராமேன்கள், தொலைக்காட்சிக்காரர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டி அடித்தனர். இதில் காயமடைந்த மூன்று பத்திரிகையாளர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
செய்தி கேள்விப்பட்ட அரசியல்வாதிகள் கோர்ட்டுக்கு வந்தனர். அவர்களை வக்கீல்கள் திட்டித் தீர்த்தனர். அரசியல்வாதிகளின் ஆதரவாளர்கள் வந்து கோர்ட்டை இழுத்து மூடி வாசலுக்கு பூட்டுபோட்டனர். அரசியல்வாதிகளை தகாத வார்த்தைகளால் திட்டிய வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றதும் வக்கீல்கள் மன்னிப்பு கேட்டனர்.
காவல் துறையினரின் குடும்பங்களுக்குத் தகவல் பறந்ததும் அவர்கள் புதுச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம், சாலைமறியல் என நேற்று புதுச்சேரி ஆரவாரமாக இருந்தது.
லஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ. கைது செய்த எஸ்.ஐ, வக்கீல் இருவருக்கும் ஜாமீன் வழங்கிய பிறகே நீதிபதி வெளியே வர முடிந்தது. நேற்று முழுவதும் புதுச்சேரி கோர்ட்டு வளாகம் போர்க்களம் போல் காட்சியளித்தது.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, லஞ்சம், வழிப்பறி, போலி மது தயாரித்தல் அதிகரித்து வருகிறது. போலீசார் எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்பது இங்கு வழக்கம்.
புதுச்சேரியில் நடைபெறும் குற்றச் செயல்களுக்கு அரசியல்வாதிகளுக்கு பெரும் பங்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் தான் லஞ்சமும் வாங்கிவிட்டு, சீருடையிலேயே வந்து பணி செய்யாமல் கோர்ட்டை முற்றுகையிட்டு, பத்திரிகையாளர்களைத் தாக்கியுள்ளனர் காவலர்கள்.
இந்த காவல்துறையினர் மீது யார் நடவடிக்கை எடுப்பது?