அதிமுக கூட்டணியில் (கார்த்திக்கை கழற்றிவிட்ட) பார்வர்ட் பிளாக்
பார்வர்டு பிளாக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிஸ்வாஸ், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் அணியில் உள்ள கட்சி பார்வர்ட் பிளாக். அதிமுகவுடன் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்துவிட்ட நிலையில் பிஸ்வாசும் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக கூட்டணியில் தனது கட்சியும் இணைவதாக அறிவித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை நடிகர் கார்த்திக்கை வைத்து தமிழகத்தில் தனது கட்சியை நடத்தி வந்தார் பிஸ்வாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவரை கார்த்திக் படாதபாடுபடுத்தி எடுத்துவிட்டார்.
இதனால் வெறுத்துப் போய் கார்த்திக்கை பதவி நீக்கம் செய்தார். இதையடுத்து கோபம் கொண்ட கார்த்திக் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கினார்.
இந் நிலையில் தான் போயஸ் கார்டன் படியறியுள்ளார் பிஸ்வாஸ். அதிமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்ததோடு வரும் திருமங்கலம் இடைத் தேர்தலிலும் தனது கட்சியின் ஆதரவை அதிமுகவுக்கு தெரிவித்துள்ளார்
இந்தச் சந்திப்பின்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பசும்பொன் பாண்டியன், மாநிலப் பொறுப்பாளர் கதிரவன் ஆகியோரும் உடனிருந்தனர்.
சந்திப்புக்குப் பின் தா.பாண்டியன் நிருபர்களிடம் பேசுகையில்,
திருமங்கலம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரசாரம் செய்ய மாநில செயற்குழு உறுப்பினர் பி.சேதுராமன் தலைமையில் தேர்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தோழமை கட்சியினருடன் சேர்ந்து தேர்தல் பணியாற்றுவார்கள்.
மக்கள் ஆதரவு எங்களுக்கு இருப்பதால் திருமங்கலம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்றார்.