சீமானுடன் கொளத்தூர் மணியும் கைது
அந்தக் கூட்டத்தில் பேசியவர்கள் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை விமர்சித்தும், புலிகள் தலைவர் பிரபாகரனை வாழ்த்தியும் பேசியதாகவும் கூறி, அவர்களை கைது செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து ஈரோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து சீமானைக் கைது செய்தனர். அவரை 31ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சீமான் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சீமான் மீது இந்திய தண்டனை சட்டம் 505 (பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், கலவரத்தை உண்டாக்கும் விதத்தில் பேசுதல்) மற்றும் 13 (1) (பி) (இந்திய இறையாண்மைக்கு எதிராக இன்னொரு நாட்டு பகுதியுடன் இணைத்தோ பிரித்தோ பேசுவது, சட்டவிரோத செயல்களை தூண்டும் விதத்தில் அல்லது உடந்தையாக பேசுவது) ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், 2வது வழக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவாகும். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.
கொளத்தூர் மணி:
சீமான் கலந்துகொண்ட ஈரோடு கூட்டத்தில் பேசிய பெரியார் திராவிட கழக மாநில தலைவர் கொளத்தூர் மணியும் அதே சட்டப்பிரிவுகளின் கீழ் மேட்டூரில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவரும் சீமானுடன் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக நிருபர்களிடம் பேசிய மணி,
கடந்த 14ம் தேதி தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி சார்பில் ஈரோட்டில் ஈழத்தமிழர் ஆதரவு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, ஈழத் தமிழர் படுகொலை குறித்தும், அவர்கள் படும் அவலநிலை குறித்தும் பேசினோம். ஈழத் தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு எந்தவித உதவியும் செய்யக்கூடாது என்று குறிப்பிட்டோம்.
வைகோ வழக்கிலேயே தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசுவது குற்றம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இருப்பினும் தமிழக அரசு தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது வருத்தமளிக்கிறது. காங்கிரசாரின் நெருக்கடியால் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கருதுகிறேன் என்றார்.
பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவரும் கைது:
இதற்கிடையே ஈரோட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசப்பட்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் செயலாளர் மணி அரசனும் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
வாகனங்கள் மீது தாக்குதல்:
இயக்குநர் சீமான் மற்றும் கொளத்தூர் மணி ஆகியோரை சந்திக்க போலீஸார் அனுமதி மறுத்ததால் ஆவேசமடைந்த தொண்டர்கள், கார், பஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் ஆகியவற்றின் கண்ணாடியை உடைத்தனர்.
சீமானும், கொளத்தூர் மணியும் ஈரோடு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, இருவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் கோஷம் எழுப்பினர்.
சீமான் மற்றும் கொளத்தூர் மணி நீதி மன்றத்தில் இருந்து வெளியே வந்தவுடன் அவர்களிடம் பேச ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் முயன்றனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை.
இதனால் ஆவேசம் அடைந்த சிலர் அவ்வழியே சென்ற கார், பஸ் ஆகியவற்றின் கண்ணாடியை உடைத்தனர். மேலும் போலீஸ் வாகனங்கள் மீது கற்களையும் வீசினர்.
இதில் போலீசாரின் இரண்டு வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.